Sunday, August 21, 2011

ஆகஸ்ட் 21, 2011

உலக இளையோர் நாளின் இறுதித் திருப்பலி: கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்திட திருத்தந்தை அழைப்பு

    உலகின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் வந்து இங்கு கூடியிருக்கும் இளையோரே, உங்களைப் பார்க்கும்போது என் இதயம் மகிழ்வால் நிறைகிறது. நாம் இந்த உலக இளையோர் நாளின் உச்சக்கட்டத்தை இங்கு அடைந்துள்ளோம். உங்கள் மீது தனிப்பட்ட அன்பு கொண்டு, உங்களை தன் நண்பர்கள் என்று அழைத்த இயேசு, (யோவான் 15: 15) உங்களைச் சந்திக்க மீண்டும் ஒருமுறை இங்கு வருகிறார். உங்கள் வாழ்வுப் பயணத்தில் உங்களுடன் நடக்க அவர் விழைகிறார் என்று தன் மறையுரையைத் துவங்கிய திருத்தந்தை, தொடர்ந்து இஞ்ஞாயிறுக்கான நற்செய்தியைக் குறித்து தன் சிந்தனைகளை வழங்கினார்.
   கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் இரு வழிகளை இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது. (மத். 16: 13-20) சொந்த ஈடுபாடு எதுவும் இல்லாமல் கிறிஸ்துவைப் பற்றிய கருத்துக்களைத் திரட்டுவது முதல் வழி. “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று இயேசு கேட்டபோது, இந்த முதல் வழியில் திரட்டிய பதில்களைச் சீடர்கள் இயேசுவிடம் கூறினர். பின்னர் இயேசு தன் சீடர்களிடம் திரும்பி, “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். பேதுருவின் பதில் வெறும் கருத்துக்களைத் தாண்டி, விசுவாசத்தின் அறிக்கையாக ஒலிக்கிறது. விசுவாசம் என்பது மனித அறிவு சார்ந்த முயற்சிகளைத் தாண்டி, இறைவன் வழங்கும் ஒரு கொடை. கிறிஸ்துவின் மீது கொள்ளும் தனிப்பட்ட ஓர் உறவால், அவரிடம் முழுமையாக சரண் அடையும் ஒரு முயற்சி. விசுவாசமும், இயேசுவைப் பின்பற்றுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இவ்வாறு நற்செய்தியைக் குறித்த தன் சிந்தனைகளைக் கூறியத் திருத்தந்தை, இளையோரிடம் தனது ஆவலை வெளியிட்டார்.
   என் அன்பு மிகு இளையோரே, இன்று உங்களிடம் கிறிஸ்து “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்ற இதே கேள்வியைக் கேட்கிறார்: கிறிஸ்துவின் கேள்விக்கு தாராள மனதோடும், துணிவோடும் பதில் சொல்லுங்கள். பேதுருவின் விசுவாச அறிக்கைக்குப் பதிலாக இயேசு திருச்சபையைக் குறித்து பேசுகிறார். “எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.” என்று கூறுகிறார். பேதுருவின் வழி வந்தவர் என்ற முறையில் நான் உங்களிடம் வேண்டுவது இதுவே. கிறிஸ்துவின் மீது நீங்கள் கொள்ளும் விசுவாசம் உங்கள் தனிப்பட்ட முயற்சியாக மட்டும் இல்லாமல், திருச்சபை என்ற குடும்பத்தில் இணைந்த ஒரு முயற்சியாக இருக்கட்டும்.
   எனவே, அன்பு இளையோரே, கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டிருப்பதுபோல், திருச்சபை மீதும் அன்பு கொள்ளுங்கள். உங்கள் தலத்திருச்சபை, பங்கு எனும் குடும்பம் அதன் பல்வேறு செயல்பாடுகள் ஆகியவற்றில் நீங்கள் முழு ஈடுபாடு கொள்வது கிறிஸ்துவின் அன்பில் நீங்கள் வளர்ந்து வருவதைக் காட்டும். இயேசுவுடன் நீங்கள் கொண்டுள்ள நட்பை, கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் பெற்றுள்ள ஆழமான அனுபவங்களை உங்கள் தனிப்பட்ட உடமை என்று பூட்டி வைக்காதீர்கள். அந்த நட்பை, அன்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பகிர்வை இந்த உலகம் ஒதுக்கினாலோ, ஆர்வமின்றி விலகிச் சென்றாலோ, மனம் தளராமல் தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள். நன்னெறிகள் ஏதும் இல்லாமல், சுயநலத்தையே முக்கியப் படுத்தும் இன்றைய உலகில், நீங்கள் இங்கு ஆயிரக்கணக்கில் கூடி வந்திருப்பது ஒரு மாற்று சாட்சியாகத் திகழட்டும். இந்த உலகில் இன்னும் நன்னெறி, விசுவாசம் இவைகளுக்கு இடம் உள்ளதென்று நமது உலக இளையோர் தினம் உலகிற்குச் சொல்லட்டும் என்று தன் மறையுரையை நிறைவு செய்த திருத்தந்தை, இறுதியில் இளையோரை அன்னை மரியின் பாதுகாவலில் ஒப்படைப்பதாகக் கூறினார். மேலும், திருத்தந்தை, இறைபணியில் ஈடுபடுவோர் மற்றும் விசுவாசிகள் அனைவரும் இறைவனிடம் அதிகம் நெருங்கி வர இளையோர் செபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை:
   அன்பு நண்பர்களே, இதோ நீங்கள் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. இந்த அற்புதமான அனுபவத்தி லிருந்து நீங்கள் திரும்பிச் செல்லும்போது, உங்கள் நண்பர்கள் உங்களிடம் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ள தென்று அறிய ஆவலாய் இருப்பார்கள். நீங்கள் அடைந்துள்ள புத்துணர்வை, கிறிஸ்துவின் மீது ஆழப்பட்டுள்ள உங்கள் நட்பை எடுத்துக் கூற தயங்க வேண்டாம். உங்களுடன் பயணம் செய்ய இயலாமல், உங்கள் வரவுக்காகக் காத்திருக்கும் உங்கள் நண்பர்களை இந்த நாட்களில் நான் அடிக்கடி நினைவு கூர்ந்தேன். உங்கள் நண்பர்களுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்களைச் சுமந்து செல்லுங்கள். அதேபோல், உலகில் பல்வேறு பிரச்சனை களில் சிக்குண்டிருக்கும் இளையோருக்கும் என் அன்பைச் சுமந்து செல்லுங்கள் என்று கூறிய திருத்தந்தை, உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இளையோருக்கு உறுதுணை யாக இருந்த ஆயர்கள், குருக்கள் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.
   மூவேளை செபத்தின் இறுதியில், 2013ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த உலக இளையோர் நாள் நடைபெறும் என்பதை அறிவித்தத் திருத்தந்தை, மீண்டும் ஒரு முறை கூடியிருந்த அனைவருக்கும் ஸ்பானியம், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலியம், போர்த்துகீஸ், போலந்து ஆகிய மொழிகளில் வாழ்த்துக்களைக் கூறினார்.