Thursday, February 28, 2013

பிப்ரவரி 28, 2013

கர்தினால்களுக்கு திருத்தந்தையின் பிரியாவிடை உரை

   எட்டு ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்று பணியாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் பணியின் இறுதி நாளன்று உலகெங்குமிருந்து ரோம் நகர் வந்துள்ள கர்தினால்களை குழுவாக சந்தித்து பிரியாவிடை உரை வழங்கினார்.
அன்புக்குரிய சகோதரர்களே,
   உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எம்மாவு சீடர்களைப் போன்று, உயிர்த்த ஆண்டவரின் உடனிருப்பின் ஒளியில் உங்களோடு சேர்ந்து நடந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்த எட்டு ஆண்டுகளில், ஒளிமிகுந்த அழகான நாட்களும், மேகங்கள் சூழ்ந்த நாட்களும் இருந்தன. நமது பணியின் ஆன்மாவாகிய ஆழ்ந்த அன்போடு நாம் கிறிஸ்துவுக்கும், அவரது திருச்சபைக்கும் சேவையாற்ற முயற்சித்தோம். நமது ஒன்றிப்புக்கும், சேர்ந்து செபிக்கவும், கர்தினால்கள் குழாமின் தொடர்ந்த ஒற்றுமைக்கும் உதவிபுரியும் ஆண்டவருக்கு நாம் நன்றி சொல்வோம்.
   திருச்சபை மற்றும் அதன் பணியைப் பற்றி, என் இதயத்துக்கு நெருக்கமான ஓர் எளிய சிந்தனையை உங்களுக்கு தர விரும்புகிறேன். இறையியலாளர் குவார்டினி கூறுகிறார்: "திருச்சபை என்பது மேசையில் கட்டப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, மாறாக, அது வாழும் உண்மை. அது ஏனைய உயிர்களைப் போன்று, காலச் சூழலில் வாழ்ந்து உருமாறுகின்றது, இருந்தாலும் அதன் இயல்பு மாறாமல் நிலைத்திருக்கிறது. கிறிஸ்துவே அதன் இதயத்தில் இருக்கிறார்." இதுவே நாம் நேற்று புனித பேதுரு சதுக்கத்தில் கண்ட அனுபவம். திருச்சபை தூய ஆவியால் இயக்கப்பெற்று, உண்மையில் கடவுளின் வல்லமையால் வாழும் உயிருள்ள உடலாக இருப்பதை காண முடிகிறது. அது இவ்வுலகில் இருந்தாலும், இவ்வுலகைச் சார்ந்தது அன்று. நேற்று நாம் பார்த்தது போன்று, அது கடவுளுடையது, கிறிஸ்துவினுடையது, ஆவிக்குரியது.
  ஆகவேதான், குவார்டினியின் இன்னொரு கூற்று உண்மையாகிறது: "திருச்சபை ஆன்மாக்களில் விழித்தெழுகிறது." இறைவார்த்தையை ஏற்று தூய ஆவியின் வல்லமையால் கருதாங்கிய கன்னி மரியாவைப் போன்ற ஆன்மாக்களில் திருச்சபை வாழ்ந்து, வளர்ந்து, விழித்தெழுகிறது. கிறிஸ்துவை இந்த உலகில் பெற்றெடுப்பதற்காக, ஏழ்மையிலும் தாழ்ச்சியிலும் அவர்கள் தங்கள் உடலை கடவுளுக்கு காணிக்கை ஆக்குகிறார்கள். திருச்சபையின் வழியாக மனித உடலேற்பு மறைபொருள் எப்பொழுதும் நிலைத்திருக்கிறது. கிறிஸ்து எல்லாக் காலங்களிலும், அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபோடுகிறார். அன்பு சகோதரர்களே, இந்த மறைபொருளுக்காகவும், செபத்திலும், சிறப்பாக அன்றாட நற்கருணை கொண்டாட்டத்திலும் தொடர்ந்து இணைந்திருந்து திருச்சபைக்கும் மனிதகுலம் அனைத்துக்கும் நாம் பணியாற்றுவோம். இதுவே நம்மிடம் இருந்து யாராலும் பறித்துக்கொள்ள முடியாத மகிழ்ச்சி.
   உங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தனிப்பட்ட விதத்தில் பிரியாவிடை பெறும் இவ்வேளையில், எனது செபத்தின் வழியாக நான் உங்களுக்கு நெருக்கமாக இருப்பேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன், அதன் வழியாக நீங்கள் தூய ஆவியின் செயலுக்கு முற்றிலும் பணிந்து புதிய திருத்தந்தையை தேர்வு செய்வீர்கள். ஆண்டவர் தனது திருவுளத்தை உங்களுக்கு காட்டுவாராக! உங்கள் நடுவே, கர்தினால்கள் குழாமின் மத்தியில், எதிர்காலத் திருத்தந்தைக்கு இன்று என் நிபந்தனையற்ற மரியாதையையும், கீழ்ப்படிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்துக்காகவும், பாசத்தோடும் நன்றியோடும், உளமார்ந்த முறையில் எனது அப்போஸ்தலிக்க ஆசீரை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.

Wednesday, February 27, 2013

பிப்ரவரி 27, 2013

வரலாற்றின் பாதையில் திருச்சபையை
வழிநடத்துபவர் இறைவனே! - திருத்தந்தை

  திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பதவி விலகுவதற்கு முன் வழங்கிய இறுதி மறை போதகத்தை கேட்க வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் நடுவே பவனியாக வந்து உரை நிகழ்த்திய திருத்தந்தை, கடந்த 8 ஆண்டுகளில் இறைவன் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறி னார். தனது செபங்கள் மூலம் திருச்சபையோடு இணைந்து நடப்பதாகவும் திருத்தந்தை வாக்களித்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   எனது இந்த இறுதி புதன் பொதுமறைபோதகத்தில் கலந்துகொள்ள இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பும் பாசமும் நன்றியும் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதிக்கு பின்னர், இந்த எட்டு ஆண்டுகளில் நம் ஆண்டவர் என்னை உண்மையிலேயே வழிநடத்தினார். அவர் எனக்கு மிக நெருக்கமாக இருந்தார். தினமும் அவரது பிரசன்னத்தை என்னால் உணர முடிந்தது என்று என்னால் சொல்ல முடியும். இந்த ஆண்டுகள், திருச்சபையின் திருப்பயணத்தில் மகிழ்ச்சியும் ஒளியும் நிறைந்த நேரங்களாகவும், அதேசமயம் கடினமான தருணங்களாகவும் இருந்தன. இப்போது நான் சிலுவையைக் கைவிடேன், ஆயினும், புதிய வழியில் சிலுவையில் அறையுண்ட ஆண்டவருக்கு நெருக்கமாக இருப்பேன். செபம் மற்றும் தியானம் மூலம் திருஅவையின் பயணத்தில் தொடர்ந்து செல்வேன்.
   புனித பவுல், கொலேசேயருக்கு எழுதிய திருமுகத்தில், "உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும். நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும்" (1:9-10) எனக் கூறுகிறார். எனது இதயமும் இறைவனுக்கான நன்றியால் நிறைந்துள்ளது. அவரே திருச்சபையையும், விசுவாசத்திலும் அன்பிலுமான அதன் வளர்ச்சியையும் கண்காணிக்கிறார். நன்றியிலும் மகிழ்விலும் உங்களனைவரையும் நான் அணைத்துக்கொள்கிறேன்.
   திருச்சபையின் வாழ்விலும் நம் வாழ்விலும் இறை உடனிருப்பின் மீதான நம் மகிழ்ச்சி நிறை நம்பிக்கையை புதுப்பிக்க நாம் இந்த நம்பிக்கை ஆண்டில் அழைப்பு பெறுகிறோம். தூய பேதுருவின் வழித்தோன்றலாக நான் இந்தப் பணியை ஏற்றுக்கொண்டதிலிருந்து கடந்த எட்டு ஆண்டுகளில் இறைவன் காட்டிய தொடர்ந்த அன்பிற்கும் வழிகாட்டுதலுக்கும் நான் தனிப்பட்டமுறையில் நன்றியுள்ளவனாக உள்ளேன். என்னைப் புரிந்து கொண்டதற்கும், ஆதரவு வழங்கியதற்கும், செபங்களுக்கும் இங்கு ரோம் நகரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நீண்ட செபத்திற்குப்பின் நான் எடுத்த இந்தப் பணிஓய்வு குறித்த முடிவு, இறைவிருப்பத்தில் கொண்டுள்ள முழு நம்பிக்கை மற்றும் அவரின் திருச்சபை மீது கொண்டுள்ள ஆழமான அன்பின் கனியாகும்.
   என் செபங்கள் மூலம் நான் திருச்சபையுடன் தொடர்ந்து இணைந்து நடப்பேன். எனக்காகவும் வரவிருக்கும் புதிய திருத்தந்தைக்காகவும் செபிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அன்னைமரியோடும் அனைத்துப் புனிதர்களோடும் இணைந்து விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் நம்மை இறைவனிடம் ஒப்படைப்போம். அவரே நம் வாழ்வின்மீது அக்கறை கொண்டு பராமரிக்கிறார். வரலாற்றின் பாதையில் இவ்வுலகையும் திருச்சபையையும் வழிநடத்துபவரும் அவரே. மிகுந்த பாசத்தோடு உங்கள் அனைவரையும் இறைப்பராமரிப்பில் ஒப்படைக்கிறேன். இறைவனால் மட்டுமே தர முடிந்த வாழ்வின் முழுமைக்கு உங்கள் இதயங்களைத் திறக்க உதவும் நம்பிக்கையில் உங்களைப் பலப்படுத்துமாறு இறைவனை நோக்கி வேண்டுகிறேன். நமது இதயத்தில், உங்கள் ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஆண்டவர் அண்மையில் இருப்பதன், அவர் நம்மை கைவிடாமல் இருப்பதன், தம் அன்பால் நம்மை சூழ்ந்திருப்பதன்  மகிழ்ச்சி எப்பொழுதும் இருப்பதாக! நன்றி!

Sunday, February 24, 2013

பிப்ரவரி 24, 2013

சரியான பாதைக்கும், செயலுக்கும் திரும்ப
செபம் நம்மை வழிநடத்துகிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான மேற்பட்ட மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகலில் இறுதி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசுவின் உருமாற்றம் பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாடு நமக்கு எப்பொழுதுமே ஆண்டவரின் உருமாற்ற நற்செய்தியை வழங்குகிறது. நற்செய்தியாளர் லூக்கா, 'இயேசு வேண்டிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது' என்று அழுத்தமாக கூறுகிறார். பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருடன் உயர்ந்த மலைமீது இயேசு ஆன்மீக பயிற்சியில் இருந்தபோது, தந்தையுடனான உறவில் அவர் பெற்ற ஆழ்ந்த அனுபவம் இது; இந்த மூன்று சீடர்களும் தங்கள் குருவின் இறைத்தன்மை வெளிப்பட்ட தருணங்களில் எப்பொழுதும் உடனிருந்தவர்கள்.
   சற்று முன் தனது இறப்பையும், உயிர்ப்பையும் (9:22) முன்னுரைத்த ஆண்டவர் தன் மாட்சியின் முன்சுவையை சீடர்களுக்கு அளிக்கிறார். திருமுழுக்கைப் போலவே, உருமாற்றத்தின் போதும், நாம் விண்ணக தந்தையின் குரலை கேட்கிறோம்: "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவி சாயுங்கள்" (9:35). மோசே மற்றும் எலியாவின் உடனிருப்பு, பழைய உடன்படிக்கையின் சட்டத்தையும் இறைவாக்கினரையும் குறித்து நிற்கிறது; இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: உடன்படிக்கையின் முழு வரலாறும் அவரையே சுட்டிக்காட்டுகின்றன, மோசேயின் காலத்தைப் போன்ற வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அல்லாமல், கிறிஸ்து விண்ணகத்துக்கு ஒரு புதிய விடுதலைப் பயணத்தை நிறைவு செய்கிறார் (9:31). "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது" (9:33) என்ற பேதுருவின் வார்த்தைகள், இந்த மறைபொருள் அனுபவத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக காணப்படுகின்றன. புனித அகுஸ்தீன் கோருகிறார்: "[பேதுரு] ... மலை மீது ... கிறிஸ்துவை ஆன்ம உணவாக கொண்டார். அவர் ஏன் வேலைகளுக்கும் துன்பங்களுக்கும் திரும்பி வர வேண்டும், மேலே இருக்கும்போது அவர் கடவுளுக்குரிய தூய அன்பை முழுமையாக உணர்ந்தது அவரை புனித நடத்தையில் வாழ தூண்டியது?"
   நற்செய்தியின் இந்த பகுதியை தியானிப்பதன் வழியாக நாம் மிக முக்கிய பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். முதலாவது, செபத்தின் முதன்மை, அது இல்லாமல் திருத்தூது மற்றும் பிறரன்பு பணிகள் அனைத்தும் நடவடிக்கையாக சுருங்கிவிடும். தவக்காலத்தில் நாம் செபத்திற்கு போதிய நேரம் ஒதுக்க கற்றுக்கொள்கிறோம், தனிப்பட்ட விதத்திலும் சமூகத்திலும் அது நமது ஆன்மீக வாழ்வுக்கு உயிர்மூச்சு அளிக்கிறது. மேலும், செபிப்பது என்பது உலகம் மற்றும் அதன் முரண்பாடுகளில் இருந்து ஒருவரை தனிமைப்படுத்துவது இல்லை, மாறாக தாபோரில் பேதுரு விரும்பியது போன்று, செபம் சரியான பாதைக்கும், செயலுக்கும் திரும்ப நம்மை வழிநடத்துகிறது. நான் தவக்காலத்துக்கான எனது செய்தியில் எழுதியிருப்பது: "கிறிஸ்தவ வாழ்வு, கடவுளை சந்திப்பதற்காக தொடர்ந்து மலை ஏறுவதையும், பின்னர் அவரிடம் இருந்து பெற்ற அன்பையும் பலத்தையும் தாங்கி கீழே இறங்கி வருவதையும் உள்ளடக்கியது, அதன் மூலம் கடவுளின் சொந்த அன்பைக் கொண்டு நமது சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்ய முடியும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, எனது வாழ்வின் இத்தருணத்தில், இந்த கடவுளின் வார்த்தை தனிப்பட்ட விதத்தில் எனக்கு வழங்கப்பட்டதாக உணர்கிறேன். செபத்திலும் தியானத்திலும் மேலும் அதிகமாக என்னை அர்ப்பணிக்குமாறு, "மலை மீது ஏற" ஆண்டவர் என்னை அழைக்கிறார். ஆனால் இது திருச்சபையை கைவிடுவதாக பொருளாகாது, உண்மையில், இதை செய்ய கடவுள் என்னை கேட்டாரென்றால், அதன் மூலம், இதுவரை நான் செய்தது போன்று, அதே அர்ப்பணத்தோடும் அதே அன்போடும், எனது வயதிற்கும் பலத்திற்கும் பொருந்தும் வகையில் திருச்சபைக்கு எனது சேவையைத் தொடர முடியும். நாம் கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம்: செபத்திலும் பிறரன்பு செயல்களிலும் ஆண்டவர் இயேசுவை நாம் அனைவரும் பின்பற்ற அவர் எப்பொழுதும் நமக்கு உதவி செய்வாராக!
   இந்த நாட்களில் நான் பெற்று வரும் நன்றிக்கும், பாசத்துக்கும், செப நெருக்கத்துக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஈஸ்டரை நோக்கிய தவக்கால பயணத்தை நாம் தொடரும் வேளையில், உருமாற்றத்தின் வழியாக மலை மீது மாட்சியை வெளிப்படுத்திய மீட்பராம் இயேசு மீது நமது கண்களை தொடர்ந்து பதிப்போம். உங்கள் அனைவர் மீதும் கடவுளின் ஆசிகள் அதிக அளவில் பொழியப்பட வேண்டுகிறேன்.

Sunday, February 17, 2013

பிப்ரவரி 17, 2013

கடவுள் மீதான விசுவாசத்தை மீண்டும் கண்டறிய
தகுந்த காலம் தவக்காலம் - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, சோதனையை எதிர்கொள்வது பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கடந்த புதன்கிழமை, பாரம்பரிய சாம்பல் பூசும் சடங்குடன், ஈஸ்டர் தயாரிப்புக்கான மனமாற்றம் மற்றும் தவத்தை மேற்கொள்ளும் காலமாகிய தவக்காலத்துக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். தாயும் ஆசிரியருமான திருச்சபை, தனது உறுப்பினர்கள் அனைவரும் ஆவியில் புதுப்பிக்கப்படவும், கடவுளை நோக்கி மீண்டும் நெருங்கி வரவும், அன்பில் வாழும் பொருட்டு தற்பெருமையையும், தன்னலத்தையும் மறுக்கவும் அழைக்கிறது. இந்த விசுவாச ஆண்டின் தவக்காலம், நமது வாழ்வுக்கும், திருச்சபையின் வாழ்வுக்கும் அடிப்படையாக விளங்கும் கடவுள் மீதான விசுவாசத்தை மீண்டும் கண்டறிய தகுந்த காலம் ஆகும். இது எப்பொழுதுமே போராட்டத்தை உள்ளடக்கியது, ஓர் ஆன்மீக போராட்டம், ஏனெனில் இயல்பாகவே தீய ஆவி நமது புனிதத்தன்மையை எதிர்ப்பதுடன், கடவுளின் வழியில் இருந்து நம்மை விலக்கவும் முயல்கிறது, இதற்காகவே தவக்காலத்தின் முதல் ஞாயிறு நற்செய்தி ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் பாலைநில சோதனையை எடுத்துரைக்கிறது.
   இயேசு, உண்மையில், திருமுழுக்கு மூலம் யோர்தானில் மெசியாவாக தூய ஆவியால் அருட்பொழிவு பெற்ற பிறகு, அதே ஆவியால் பாலைநிலத்துக்கு அலகையால் சோதிக்கப்படுமாறு அழைத்துச் செல்லப்படுகிறார். தனது பொது பணியைத் தொடங்கும்போது, சோதனையாளன் பரிந்துரைத்த மெசியா பற்றிய தவறான உருவங்களைப் புறக்கணித்து, இயேசு தன்னை வெளிப்பட்டுத்த வேண்டும். ஆனால் இந்த சோதனைகள் மனிதனின் தவறான உருவங்கள், ஒவ்வொரு நேரமும் மனசாட்சியை வேரறுத்து, பொருத்தமானவையாகவும், சரியானவையாகவும், நல்லவையாகவும் கூட வேடமிடுகின்றன. நற்செய்தியாளர்களான மத்தேயுவும், லூக்காவும் வரிசையில் மட்டுமே மாறுபட்ட இயேசுவின் மூன்று சோதனைகளை தருகிறார்கள். அவற்றின் மையம் எப்பொழுதும் சொந்த விருப்பங்களுக்காக கடவுளை பயன்படுத்துவதிலும், வெற்றி மற்றும் உலகப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதிலும் இருக்கிறது. சோதனையாளன் நழுவக்கூடியவனாக இருக்கிறான்; இது நேரடியாக தீமைக்கு செல்கிறது, போலியான நலத்துக்கு, அடிப்படை தேவைகளை சந்திக்கும் வலிமையே உண்மையில் அவசியம் என்று நம்பச் செய்கிறது. இவ்வாறாக, கடவுள் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, பாதியாக குறைக்கப்பட்டு, இறுதியில் பொய்யானவராக மாறி, இல்லாதவராக, மறைந்து விடுகிறார். இறுதியாக, விசுவாச சோதனையில் என்ன இடர்படுகிறது என்றால் கடவுள் இடர்படுகிறார். வாழ்வின் முக்கியமான தருணங்களில், நாம் குறுக்கு வழிகளில் இருக்கும் எந்த நேரத்திலும்: நாம் கடவுளைப் பின்பற்ற விரும்புகிறோமா அல்லது நம்மையா? சொந்த விருப்பமா அல்லது உண்மையான நலமா, எது உண்மையில் நன்மை?
   திருச்சபை தந்தையர்கள் நமக்கு எப்படி கற்பிக்கிறார்கள், இயேசு நமது மனித நிலைக்கு, பாவத்தின் படுகுழிக்கும் அதன் விளைவுகளுக்கும் இறங்கியதன் பகுதியாக சோதனைகள் இருக்கின்றன. கீழிறங்குதலின் இறுதி நிலைக்கு, சிலுவை மரணம் வரையிலும், கடவுளிடம் இருந்து பெரிதும் பிரிந்திருக்கும் கீழுலகிற்கு இயேசு வந்தார். காணாமற்போன ஆடுகளாகிய மனிதரை பத்திரமாக கடவுளிடம் திரும்ப கொண்டு சேர்க்கும் கையாக அவர் இருக்கிறார். புனித அகுஸ்தீன் கற்பிப்பது போல, இயேசு தனது வெற்றியை நமக்கு தருவதற்காக, நம்மிடம் இருந்து சோதனையை எடுத்துக்கொண்டார். எனவே, நாம் நம்மை எதிர்கொள்ளவும், தீய ஆவிக்கு எதிராக போராடவும் பயப்படக்கூடாது, முக்கியமானது என்னவென்றால் நாம் வெற்றியாளரான அவரோடு இருக்கிறோம். அவரோடு இருக்க, அன்னை மரியாவை நோக்கி திரும்புவோம்: சோதனை நேரங்களில் பிள்ளைக்குரிய நம்பிக்கையோடு நாம் வேண்டுவோம், அவரது தெய்வீக மகனின் வலிமையான உடனிருப்பை உணரவும், கிறிஸ்துவின் வார்த்தைக்கு எதிரான சோதனைகளை நிராகரிக்கவும் உதவுவார், அதன் மூலம் கடவுளை நமது வாழ்வின் மையாமாக்குவோம்.

Thursday, February 14, 2013

பிப்ரவரி 13, 2013

ஆண்டவரிடம் திரும்புவது அவர் இரக்கத்தில் நம்பிக்கை கொள்ளும் விசுவாசத்தின் விளைவு - திருத்தந்தை

  திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு சாம்பல் புதன் திருவழிபாடு புனித சபினா பேராலயத்துக்கு பதிலாக, புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்றது. தனது பதவி காலத்தில் திருத்தந்தை நிகழ்த்திய கடைசி பொது திருப்பலியான இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு மறையுரை வழங்கிய திருத்தந்தை, தவக்காலத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   சாம்பல் புதனான இன்று, நாம் ஒரு புதிய தவக்கால பயணத்தை தொடங்குகிறோம்; இது மரணத்தின் மீதான வாழ்வின் வெற்றியைக் கொண்டாடும் உயிர்ப்பின் மகிழ்ச்சியை நோக்கிய நாற்பது நாட்களுக்கும் மேலான நீண்ட பயணம். சூழ்நிலைகளின் காரணமாக, புனித சபினா பேராலயத்துக்கு பதிலாக, நாம் இன்று புனித பேதுரு பேராலயத்தில் நற்கருணை கொண்டாட்டத்துக்காக கூடியிருக்கிறோம். திருத்தூதர் பேதுருவின் கல்லறையை சூழ்ந்துள்ள நாம், இத்தருணத்தில் திருச்சபையின் முன்னோக்கிய பாதைக்காகவும், தலைமை மேய்ப்பரும் ஆண்டவருமாகிய கிறிஸ்துவில் நம் விசுவாசம் புதுப்பிக்கப்படவும் அவரது செபத்தை வேண்டுவோம். ஒவ்வொருவருக்கும், குறிப்பாக ரோம் மறைமாவட்டத்தின் விசுவாசிகளுக்கும் நன்றி சொல்ல எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு; பேதுருவின் பணியை நிறைவு செய்ய தயாரித்து கொண்டிருக்கும் என்னை உங்கள் செபத்தில் சிறப்பாக நினைவுகூர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
   தவக்காலத்தில் திடமான மனநிலைக்கும் செயல்களுக்கும் மாற, நாம் கடவுளின் அருளால் அழைக்கப்பட்டிருப்பது குறித்த சிந்தனைகளை நமக்கு அறிவிக்கப்பட்ட வாசகங்கள் வழங்குகின்றன. அனைத்துக்கும் முதலாவதாக இறைவாக்கினர் யோவேல் இஸ்ரயேல் மக்களுக்கு விடுத்த ஆற்றல்மிகு அழைப்பை திருச்சபை பரிந்துரைக்கிறது: "ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" (2:12). 'முழு இதயத்தோடு' என்ற சொற்றொடரை கவனியுங்கள், நமது சிந்தனைகள், உணர்வுகள், முடிவுகள், செயல்கள் ஆகியவற்றின் ஆழத்தில் இருந்து என்பது அதன் பொருள். கடவுளிடம் திரும்புவது சாத்தியமா? ஆம், ஏனெனில் இதற்கான உந்துதல் கடவுளின் இதயத்திலும், அவரது இரக்கத்தின் ஆற்றலிலும் இருந்து உருவாகிறது. இறைவாக்கினர் கூறுகிறார்: "கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்" (2:13). ஆண்டவரிடம் திரும்புவது சாத்தியமே, ஏனெனில் இது கடவுளின் அருட்செயல், அவரது இரக்கத்தில் நம்பிக்கை கொள்ளும் விசுவாசத்தின் விளைவு. கடவுளின் வார்த்தைகளை இறைவாக்கினர் மீண்டும் ஒருமுறை உரைக்கிறார்: "நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், உங்கள் இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்" (2:13).
   "முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" என்ற அழைப்பு தனி மனிதருக்குரிய அழைப்பு அல்ல, முழு சமூகத்திற்கும் உரியது. மேலும் நாம் முதல் வாசகத்தில் கேட்கிறோம்: "சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்" (2:15-16). விசுவாசத்திலும் கிறிஸ்தவ வாழ்விலும் சமூக பரிமாணம் என்பது இன்றியமையாதது. "சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கவே" (யோவான் 11:52) கிறிஸ்து வந்தார். ஒவ்வொரு நபரும், பாவங்களுக்காக மனம் வருந்தும் தவப் பயணத்தை தனியாக மேற்கொள்ள முடியாது என்ற விழிப்புணர்வை பெற்று, திருச்சபையின் சகோதர, சகோதரிகளோடு ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.
   இறுதியாக, குருக்களின் செபங்களைப் பற்றி இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார்: "ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், 'ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர். அவர்களுடைய கடவுள் எங்கே?' என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?' எனச் சொல்வார்களாக!" (2:17). இந்த செபம் நம் ஒவ்வொருவருக்கும், நமது சமூகத்துக்கும் கிறிஸ்தவ வாழ்வு மற்றும் விசுவாசத்துக்கு சான்று பகர்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது. அதன் மூலம் நாம் திருச்சபையின் முகத்தை, அந்த முகம் தற்போது உருகுலைந்திருப்பதை வெளிப்படுத்த முடியும். திருச்சபையின் ஒற்றுமைக்கு எதிராக திருச்சபைன் உடலில் ஏற்படும் பிரிவினைகளை முக்கியமான பாவங்களாக நான் கருதுகிறேன். இந்த தவக்காலத்தில் தன்னலம், போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வென்று, திருஆட்சி அமைப்பில் ஆழ்ந்த, தெளிவான ஒன்றிப்பை ஏற்படுத்துவது விசுவாசத்துக்கு புறம்பே, அக்கறையின்றி வாழ்வோருக்கு விலைமதிப்பற்ற, எளிய அடையாளமாக விளங்கும்.
   "இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!" (2 கொரிந்தியர் 6:2) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் நம்மை விரைந்து செயல்பட அழைக்கின்றன. இப்பொழுது என்பதை நாம் இழந்துவிடக் கூடாது, அது நமக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட வாய்ப்பு. மனிதரின் பாவங்களுக்காக கிறிஸ்து தனது வாழ்வை அர்ப்பணித்ததைப்  பற்றி திருத்தூதர் எடுத்துரைக்கிறார். புனித பவுலின் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை: "நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்" (5:21). மாசற்றவரும், தூயவருமான இயேசு மரணத்தைக் கொணரும் பாவச்சுமையை தாங்கி, மனிதகுலத்தோடு சிலுவை சாவை ஏற்றார். மனிதரான இறைமகன், கொல்கதாவில் உயர்த்தப்பட்ட சிலுவையில் தொங்கி செலுத்திய மிக அதிக விலையால் நாம் கடவுளோடு மீண்டும் ஒப்புரவாகியுள்ளோம். இதில் தீமையின் படுகுழியிலான மனித துன்பங்களில் கடவுளின் பங்கேற்பு நமது நீதிக்கு அடிப்படை ஆகிறது. கடவுளிடம் முழு இதயத்தோடு திரும்புவதற்கான தவக்கால பயணம், சிலுவை வழியாக கிறிஸ்துவைப் பின்பற்றி கல்வாரி பாதைக்கு செல்வதில் இருக்கிறது. இந்த பயணத்தில் நமது தன்னலத்தை கைவிட்டு, நமக்குரியவற்றை மூடி வைத்துவிட்டு, நமது இதயங்களைத் திறந்து உருமாற்றும் கடவுளுக்காக அறையைத் தயார் செய்வோம். புனித பவுல் நமக்கு நினைவூட்டுவது போன்று, சிலுவை பற்றிய செய்தி நமக்குள் எதிரொலிக்க வேண்டும். நமது பாதையை ஒளிர்விக்கும் ஒளியாம் இறைவார்த்தையை கவனமாக கேட்க, தவக்கால பயணத்தில் இது நமக்கு ஒரு அழைப்பாக அமைகிறது.
   மலைப்பொழிவோடு இணைந்ததாக அழைக்கப்படும் மத்தேயு நற்செய்தி பகுதியில், மோசேயின் சட்டத்தின் அடிப்படையிலான மூன்று வழக்கங்களைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார்: தர்மம், இறைவேண்டல் மற்றும் நோன்பு. தவக்கால பயணத்தில் முழு இதயத்தோடு கடவுளிடம் திரும்புவதற்கான அழைப்புக்கு பதிலளிக்க பாரம்பரியமாக வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் இவை. சமயம் சார்ந்த ஒவ்வொரு செயலுக்கும் தரமும், அதை உறுதி செய்யும் கடவுளுடனான நமது உண்மை உறவும் தேவைப்படுவதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். இந்த காரணத்திற்காக பிறருடைய பாராட்டையும், அங்கீகாரத்தையும் தேடும் வெளிவேடத்தை அவர் எதிர்க்கிறார். உண்மையான சீடர் தனக்காகவோ, மக்களுக்காகவோ அன்றி, எளிமையாகவும் தாராளத்தோடும் ஆண்டவருக்கு சேவை செய்வார்: "மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்" (மத்தேயு 6:4,18). நமது சொந்த மகிமையை குறைவாக தேடி, நேர்மையாளர்களின் பரிசு கடவுளே, அவரில் இணைவதே,  இங்கே விசுவாச பயணத்திலும், வாழ்வின் முடிவில், அமைதி ஒளியில் நேருக்கு நேராகவும் எப்பொழுதும் அவரோடு இருப்பதே என்பதை அதிகம் உணர்ந்து செயல்பட்டால் நமது பயிற்சி அதிக பயனுள்ளதாக இருக்கும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, நாம் நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் நமது தவக்கால பயணத்தை தொடங்குகிறோம். "முழு இதயத்தோடு கடவுளிடம் திரும்பி வாருங்கள்" என்ற மனமாற்றத்திற்கான அழைப்பு நம்மில் வலிமையாக எதிரொலிக்கட்டும், நம்மை புதியவர்களாக மாற்றும் அவரது அருளை ஏற்பதன் மூலம் இயேசுவின் வாழ்வில் பங்கேற்போம். சாம்பல் பூசும் சடங்கிலும் விடுக்கப்படும் இந்த எளிய, அழகிய அழைப்புக்கு நம்மில் யாரும் செவிகொடுக்காதவர்களாய் இருக்கக்கூடாது. திருச்சபையின் தாயும், ஆண்டவரின் ஒவ்வொரு சீடருக்கும் முன்மாதிரியுமான கன்னி மரியா இவ்வேளையில் நமக்கு துணைநிற்பாராக! ஆமென்.

Sunday, February 10, 2013

பிப்ரவரி 10, 2013

கிறிஸ்துவை அனைத்து மனிதருக்கும் அறிவிப்பதில்
ஒருபோதும் சோர்வுறக்கூடாது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சீமோன் பேதுருவின் அழைப்பை பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்றைய திருவழிபாட்டில், முதல் சீடர்கள் அழைக்கப்பட்ட நிகழ்வை லூக்கா நற்செய்தி வழங்குகிறது. இயேசு மக்கள் கூட்டத்துக்கு கற்பித்து, பெருந்திரளான மீன்களைப் பிடிக்கச் செய்த பிறகு, ஆண்டவரின் திருவுளத்துக்கு ஏற்ப இந்த அழைப்பு நிகழ்கிறது. உண்மையில், இயேசுவின் வார்த்தையைக் கேட்பதற்காக கெனசரேத்து ஏரிக்கரையில் இந்த மக்கள் கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்தபோது, இரவு முழுவதும் எதுவும் கிடைக்காமல் சோர்வுற்றிருந்த சீமோனை அவர் காண்கிறார். கரையில் இருந்து சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த மக்களுக்கு போதிப்பதற்காக இயேசு முதலில் அவரது படகை கேட்கிறார்; பிறகு, போதனையை முடித்ததும், அவர் சீமோனிடம் அவரது நண்பர்களுடன் ஆழத்திற்கு போய், மீன் பிடிக்க வலைகளைப் போடுமாறு கட்டளையிடுகிறார். சீமான் கீழ்படிந்ததால், அவர்கள் பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். இவ்வாறு, அற்புத அடையாளங்களின் வழியாக முதல் சீடர்கள் எப்படி இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள், அவரில் நம்பிக்கை வைத்தார்கள், அவரது வார்த்தையின்படி நடந்தார்கள் என்பதை நற்செய்தியாளர் காட்டுகிறார். இந்த அடையாளத்துக்கு முன் தன்னைப் பற்றி இயேசுவிடம் பேசும் சீமோன், அவரை "ஐயா" என்று அழைத்துக் கொண்டிருந்தார், பின்னரோ அவர் அவரை "ஆண்டவர்" அழைக்கிறார். இது கடவுளின் அழைப்பினை உணர்த்தும் நிலை, இதில் தேர்ந்தேடுக்கப்படுபவரின் தரமல்ல, "உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்ற சீமோனைப் போன்ற விசுவாசமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
   மீனின் வடிவம் திருச்சபையின் பணியைக் குறிப்பதாக உள்ளது. இது பற்றி புனித அகுஸ்தீன் இவ்வாறு கூறுகிறார்: "ஆண்டவரின் கட்டளைக்கு ஏற்ப சீடர்கள் இரண்டு முறை மீன்பிடிக்கச் செல்கிறார்கள்: ஒருமுறை பாடுகளுக்கு முன்பு, அடுத்தது உயிர்ப்புக்கு பின்பு. மீன்பிடிக்கும் இந்த இரண்டு காட்சிகளில், முழு திருச்சபையும் அடையாளப்படுத்தப்படுகிறது: தற்போது உள்ளதும், இறந்து உயிர்த்தெழுதலுக்கு பிந்தியதுமான திருச்சபை. இப்போது இது பெருந்திரளானவர்களை, நல்லோரும் தீயோருமான எண்ணற்றவர்களை ஒன்றாக கொண்டுள்ளது; உயிர்த்தெழுதலுக்கு பின் நல்லோரை மட்டுமே கொண்டிருக்கும்." பேதுருவின் இந்த அனுபவம் தனித்தன்மை வாய்ந்தது, இருப்பினும் நற்செய்தியின் அனைத்து திருத்தூதர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவர் கிறிஸ்துவை உலகின் கடையெல்லை வரை உள்ள அனைத்து மனிதருக்கும் அறிவிப்பதில் ஒருபோதும் சோர்வுறக்கூடாது. அனைத்துக்கும் மேலாக, இன்றைய வாசகம் குருத்துவம் மற்றும் அர்ப்பண வாழ்வுக்கான அழைப்பை பற்றி எடுத்துரைக்கிறது. தனது வாழ்க்கை நிலையை முடிவு செய்வது மனிதருக்கு உரியதல்ல; அது கடவுளின் அழைப்புக்கான பதில்மொழி. கடவுள் அழைக்கும்போது, மனித பலவீனம் பயப்படக்கூடாது. நமது ஏழ்மையில் செயலாற்றும் அவரது நம்பிக்கையின் பலம் தேவை; உருமாற்றுவதும் புதுப்பிப்பதுமான அவரது இரக்கத்தின் வல்லமையை அதிகமதிகமாக நாம் சார்ந்திருக்க வேண்டும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, நற்செய்தியை அறிவிப்பதற்கும், அதற்கு சான்று பகர்வதற்கும் தேவையான தைரியம், நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை நம்மிலும்  நமது கிறிஸ்தவ சமூகங்களிலும் கடவுளின் இந்த வார்த்தையால் புத்துயிர் பெறட்டும். தோல்விகளும் துன்பங்களும் சோர்வுக்கு இட்டுச் செல்லக்கூடாது: நாம் விசுவாசத்தோடு வலைகளைப் போடுவது நமது பணி - மற்றவற்றை ஆண்டவர் செய்வார். திருத்தூதர்களின் அரசியான கன்னி மரியாவின் பரிந்துரையிலும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆண்டவரின் அழைப்புக்கு, அவர் தனது சிறுமைநிலையை உணர்ந்தவராய், முழு நம்பிக்கையோடு பதிலளித்தார்: "இதோ நானிருக்கிறேன்." அந்த தாயின் உதவியோடு, தலைவரும் ஆண்டவருமான இயேசுவை பின்பற்றுவதற்கான நமது விருப்பத்தை புதுப்பிப்போம்.

Wednesday, February 6, 2013

பிப்ரவரி 6, 2013

அன்போடும் உரிமையோடும் தாம் படைத்தவற்றின்
மீது கடவுள் அக்கறை கொள்கிறார் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், கடவுளின் படைப்பை பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கடவுளை 'எல்லாம் வல்ல தந்தை'யாக விவரிக்கும் விசுவாச அறிக்கை, விவிலியத்தின் தொடக்கத்தை உறுதி செய்யும் வகையில், 'விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்தவர் அவரே' என்று தொடர்கிறது. திருமறை நூலின் முதல் வசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: " தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்" (தொடக்கநூல் 1:1). கடவுள் அனைத்துக்கும் மூலமாக இருப்பதிலும், படைப்பின் அழகிலும், அன்பு தந்தையான அவரது எல்லையற்ற ஆற்றலை காண்கிறோம்.
   படைப்பில் தந்தையாகவும், உயிரின் தொடக்கமாகவும், படைப்பதில் அவரது எல்லையற்ற ஆற்றலை வெளிப்படுத்துபவராகவும் கடவுள் இருக்கிறார். ஒரு வலிமையுள்ள நல்ல தந்தையைப் போன்று, ஒருபோதும் குறைவுபடாத அன்போடும் உரிமையோடும் தாம் படைத்தவற்றின் மீது அக்கறை கொள்கிறார். எனவே, ஆண்டவரின் எல்லையற்ற ஆற்றலையும், அவரது நன்மைத்தனத்தையும் அறிந்து அடையாளம் காணும் இடமாக படைப்பு உள்ளது, மேலும் கடவுளை படைப்பாளராக பறைசாற்றும் நம்பிக்கையாளர்களாகிய நமக்கு விசுவாசத்தின் அழைப்பாகவும் மாறுகிறது. எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் எழுதுவது போன்று, "உலகம் முழுமையும் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்றும் காணப்படாதவற்றினின்று காணப்படுகிறவை உண்டாயின என்றும் நம்பிக்கையாலேயே புரிந்து கொள்கிறோம்" (11:3). காணக்கூடிய உலகத்தின் கூறுகளை கண்டறிவதில் இருந்து, காணப்படாதவற்றை அடையாளம் காண முடிவதே விசுவாசம். நம்பிக்கையாளரால் இயற்கையின் மாபெரும் புத்தகத்தை படித்து, அதன் மொழியைப் புரிந்துகொள்ள முடியும். விசுவாசத்தை தூண்டியெழுப்பும் கடவுளின் வெளிப்பாட்டு வார்த்தை நமக்கு தேவை, அதன் மூலம் கடவுள் படைப்பாளராகவும், தந்தையாகவும் இருக்கும் உண்மையைப் பற்றிய முழு விழிப்புணர்வை அடைய முடியும்.
   திருமறை நூலில், உலகத்தை புரிந்துகொள்வதற்கான அம்சங்களை மனித அறிவு விசுவாசத்தின் ஒளியில் கண்டுணர முடியும். தொடக்கநூலின் முதல் அதிகாரம் கடவுளின் படைப்புச் செயலைப் பற்றி எடுத்துரைப்பதில் சிறப்பிடம் பெறுகிறது. கடவுள் ஆறு நாட்களில் படைப்புகளை நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுளின் முதல் சிந்தனை, தமது அன்புக்கு பதிலளிக்கும் அன்பை கண்டறிவதாக இருந்தது. இரண்டாவது, பொருள் சார்ந்த உலகைப் படைத்து அவருக்கு சுதந்திரமாக பதிலளிக்கும் உயிரினங்களில் அந்த அன்பை நிறுவுவதாக இருந்தது. இதையே ஆறு முறை மீண்டும் மீண்டும் வரும் வசனம் எடுத்துரைக்கிறது: "கடவுள் அது நல்லது என்று கண்டார்." மனிதனின் படைப்பு நிறைவடைந்ததும் ஏழாவது முறையாக இவ்வாறு வருகிறது: "கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன" (1:31). கடவுள் படைத்த அனைத்துமே நல்லதாகவும், அழகானதாகவும், ஞானத்தாலும் அன்பாலும் நிறைந்ததாகவும் இருக்கின்றன. கடவுளின் படைப்புச் செயல் ஒழுங்கையும், ஒருங்கிணைவையும், அழகையும் கொண்டு வருகிறது. திருப்பாடல் ஆசிரியர் பாடுவது போன்று, "ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின ... அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது" (33:6,9). அனைத்தும் கடவுளின் வாக்குக்கு கீழ்ப்படிவதாலேயே, வாழ்வு வழங்கப்படுகிறது, உலகம் நிலைத்திருக்கிறது.
   இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப காலத்திலும் படைப்பை பற்றி பேசுவது அறிவுப்பூர்வமானதாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தொடக்கநூலின் புனைவுகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? தொடக்கநூலில் உள்ள கதைகள், கடவுளின் முடிவற்ற காரணமாகிய வார்த்தையாலேயே இந்த பிரபஞ்சம் தோன்றி நிலைத்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த காரணத்தில் இருந்து, படைப்பாளரான ஆவியால் உலகின் வடிவமைப்பு பிறக்கிறது. உலகின் தோற்றமும், நமது தோற்றமும் பகுத்தறிவுக்கு எதிரானதாகவோ தேவையற்றதாகவோ இல்லாமல், காரணத்தோடும், அன்போடும், சுதந்திரத்தோடும் அமைந்துள்ளது என்பதை மறைநூல் நமக்கு கூறுகிறது. இந்நிலையிலேயே நாம் நம்புகிறோம். படைப்புகள் அனைத்துக்கும் உச்சமாக, "தங்களைப் படைத்தவரை அறிந்து, அன்பு செய்யும் திறன்பெற்ற" மனித ஆணும் பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர் என்பதை கூற விரும்புகிறேன். "உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?" என்று திருப்பாடல் (8:3-4) ஆசிரியர் வினவுகிறார். பிரபஞ்சத்தோடு ஒப்பிடும்போது மனிதன் சிறியவனாக இருந்தாலும், கடவுளின் நிலையான அன்பின் திருவுளம் அவனில் நிறைவேறுகிறது.
   தொடக்கநூலில் உள்ள படைப்பு பற்றிய கதைகள், மனிதருக்கான கடவுளின் திட்டத்தை நாம் அறிந்துகொள்ள உதவுகிறது. அனைத்துக்கும் மேலாக இந்த பூமியின் தூசியில் இருந்து கடவுள் மனிதரைப் படைத்தார் என்பதை அவை உறுதிபடுத்துகின்றன. நாம் கடவுள் அல்ல, நாம் நம்மை உண்டாக்கி கொள்ளவில்லை, படைப்பாளரின் வேலைப்பாட்டால் நல்ல நிலத்தில் இருந்து நாம் உரு பெற்றிருக்கிறோம் என்பதை இது உணர்த்துகிறது. மேலும், பண்பாடு, வரலாறு மற்றும் சமூக வேறுபாடுகளைத் தாண்டி மனிதர் அனைவரும் தூசியாக இருக்கின்றனர், நாம் அனைவரும் கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரே பூமியில் உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்ற அடிப்படை உண்மை தெளிவாகிறது. இரண்டாவது, நிலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட உடலில் கடவுள் தம் உயிர்மூச்சை அளித்ததால் மனிதகுலம் தோன்றியது. மனிதர் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் கடவுளிடம் வந்த வாழ்வின் மூச்சை நம்மில் சுமக்கிறோம், ஒவ்வொரு மனித வாழ்வும் கடவுளின் சிறப்பு பாதுகாப்பைப் பெற்றிருக்கிறது. இதன் காரணாமாக, மனித மாண்பை கறைபடுத்தாமல் பாதுகாப்பது ஆழ்ந்த தேவையாக இருக்கிறது.
   தொடக்கநூலின் முதல் அதிகாரங்களில், நன்மை, தீமை அறியும் மரத்தையும், பாம்பையும் கொண்ட தோட்டம் பற்றி காண்கிறோம். கடவுள் மனிதரை பாதுகாப்பான, உணவளிக்கக்கூடிய, வாழ்வதற்கு ஏற்ற இடத்தில் வைத்தார் என்பதை இந்த தோட்டம் நமக்கு கூறுகிறது. மனிதர் உலகத்தை தமது சொத்தாக கருதி கொள்ளையிடவும் சுரண்டவும் துணியாமல், அது படைத்தவரின் கொடையாகவும், அவரது மீபளிக்கும் திருவுளத்தின் அடையாளமாகவும் இருப்பதை உணர்ந்து, கடவுளின் திட்டத்துக்கு ஏற்ப இசைந்து வாழ வேண்டும். தோட்டத்தில் காணப்படும் பாம்பு ஒரு கேள்வியின் வழியாக, கடவுளுடனான உடன்படிக்கையில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த சோதனையால், படைப்பு பொருளுக்குரிய எல்லைகளையும், நமை, தீமைக்குரிய எல்லைகளையும் கடந்து, கடவுளின் படைப்பு அன்பைச் சார்ந்திருப்பதை சுமையாக கருதும் சொந்த உலகத்தில் வாழ நேரிடுகிறது. அவருடைய இடத்தில் நம்மை வைப்பதால் கடவுளுடனான உறவு பாதிக்கப்பட்டு, மற்ற அனைத்து உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஆதாம் ஏவாள் மீது குற்றம் சுமத்துகிறான். இருவரும் கடவுள் முன்னிலையில் இருந்து தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். தன சகோதரனான ஆபேலை கொலை செய்யும் அளவுக்கு காயினுக்கு பொறாமை உருவாகிறது. தன்னை படைத்தவருக்கு எதிராக மனிதன் செல்லும்போது, தனக்கு எதிராகவும் செல்கிறான், தனது தொடக்கத்தையும் அதனால் உண்மையையும் மறுப்பதால் வலி மற்றும் மரணத்துடன் உலகில் தீமை நுழைகிறது. கடவுள் படைத்த அனைத்தும் நன்றாக, உண்மையில் மிக நன்றாக இருந்தும், மனிதனின் உண்மைக்கு எதிரான முடிவுகளால், உலகில் தீமை நுழைந்தது.
   இறுதியாக, தொடக்க [ஜென்ம] பாவத்தின் உண்மை நிலையைப் பற்றி பார்ப்போம். எந்த மனிதரும் தம்மில் தாமாகவே வாழ்ந்துவிடுவது இல்லை, பிறப்பில் மட்டுமன்றி, ஒவ்வொரு நாளும் நாம் மற்றவரிடமிருந்து வாழ்வைப் பெறுகிறோம். கடவுள் மற்றும் பிறருடனான அன்புறவிலேயே நமது தனித்தன்மை தெளிவாகிறது. கடவுளின் இடத்தில் நம்மை வைக்கும்போது, பாவத்தின் இருப்பு கடவுளுடனான நமது அடிப்படை உறவை பாதித்து அழிக்கிறது. முதல் பாவத்தைப் பற்றி கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி இவாறு கூறுகிறது: மனிதன் "கடவுளுக்கு மேலாகவும் எதிராகவும், தனது படைப்புப்பொருள் நிலைக்கும், தனது நன்மைக்கும் எதிரானதைத் தானே தேர்ந்தெடுத்தான்." ஒருமுறை அடிப்படை உறவு பாதிக்கப்பட்டதால், உறவுகளின் மற்ற தூண்களும் பாதிப்புக்கு ஆளாயின, பாவம் அனைத்தையும் அழித்துவிட்டது. தொடக்கத்தில் இருந்தே மனிதகுலத்தின் உறவு அமைப்பு பாதிக்கப்பட்டு இருப்பதால், உலகில் நடைபோடும் ஒவ்வொரு மனிதரும் இந்த உறவுநிலை பாதிப்பை சுமக்கிறார். பாவத்தால் கறைபட்ட உலகில் நுழைவதால் அவரும் தனிப்பட்ட விதத்தில், தொடக்க பாவத்தினால் காயப்பட்ட மனித இயல்பினால் அடையாளம் இடப்பட்டிருக்கிறார்.
   இந்த காயப்பட்ட நிலையில் இருந்து மீண்டுவர மனிதரின் சொந்த பலத்தால் முடியவில்லை. ஆதாமுக்கு எதிரான பாதையைத் தேர்ந்தெடுத்த இயேசு கிறிஸ்துவால் கடவுளுடனான நல்லுறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் புனித பவுல் கூறுவது போன்று, ஆதாம் தான் படைப்புப்பொருள் என்பதை உணராமல் கடவுளின் இடத்தில் தன்னை வைக்க விரும்பிய வேளையில், கடவுள் வடிவில் விளங்கிய இயேசு கிறிஸ்து, தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்றதுடன், அன்பின் பாதையில் பயணித்து, கடவுளுடனான உறவை ஒழுங்குபடுத்த சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு தம்மையே தாழ்த்தினார். எனவே, கிறிஸ்துவின் சிலுவை புதிய வாழ்வின் மரமாக மாறியுள்ளது. அன்பு சகோதர சகோதரிகளே, விசுவாசத்தில் வாழ கடவுளின் மேன்மையைக் கண்டுணர்ந்து, படைப்புப் பொருளுக்குரிய நமது சிறுமையை ஏற்றுக்கொண்டு, ஆண்டவர் தமது அன்பால் நிரப்ப நம்மை அர்ப்பணிப்போம்.

Sunday, February 3, 2013

பிப்ரவரி 3, 2013

இயேசு மனிதர்களின் ஒப்புதலைத் தேடி வரவில்லை,
உண்மையை எடுத்துரைக்கவே வந்தார் - திருத்தந்தை


   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசுவின் இறைவாக்கு பணி பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   புனித லூக்காவின் நான்காவது அதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தி, கடந்த ஞாயிறு வாசகத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இயேசு வளர்ந்ததும், அவரையும் அவரது குடும்பத்தையும் அறிந்த மக்கள் வாழ்வதுமான நாசரேத்தின் தொழுகைக் கூடத்திலேயே நாம் இப்பொழுதும் இருக்கிறோம். சிறிது நேர அமைதிக்கு பிறகு, அவர் புதிய வழியில் திரும்புகிறார்: ஒய்வு நாளின் திருவழிபாட்டில் எசாயாவின் மெசியா பற்றிய இறைவாக்குகளை வாசித்து, அவரை குறித்து எசாயா பேசும் வார்த்தைகளின் நிறைவை எடுத்துரைக்கிறார். இந்த உண்மை நாசரேத்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது: ஒரு விதத்தில், "அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்றனர்" (லூக்கா 4:22). புனித மாற்கு பலரும் இவ்வாறு கூறியதாக எழுதுகிறார்: "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்!" (மாற்கு 6:2). மற்றொரு விதத்தில், அவருக்கு அடுத்திருந்தவர்கள் அவரை நன்கு அறிந்திருந்தனர்: நம்மை போன்றே அவர்களும், "இவரது கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்கள். "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" (லூக்கா 4:22) என்று கூறி, நாசரேத்தைச் சேர்ந்த ஒரு தச்சர் என்ற உணர்வையே வெளிப்படுத்தினார்கள்.
   "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" என்ற மொழியை உறுதிப்படுத்தும் இந்த முடிவினை அறிந்திருந்ததால், இயேசு தொழுகைக் கூடத்தில் இருந்த மக்களைக் கோபமூட்டும் வார்த்தைகளில் பேசுகிறார். சில நேரங்களில் இஸ்ரயேலுக்கு வெளியே அதிக விசுவாசம் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில், எலியா, எலிசா ஆகிய இரு பெரிய இறைவாக்கினர்கள் இஸ்ரயேலுக்கு வெளியே செய்த புதுமைகளை எடுத்துரைக்கிறார். அந்நேரத்தில் அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார். இங்கு ஒரு கேள்வி எழுகிறது: இயேசு என் அவர்கள் முயற்சியைத் தோல்வி அடையச் செய்தார்? முதலில் மக்கள் அவரைப் போற்றினர், மேலும் அவர் நல்லெண்ணத்தைப் பெற முடிந்தது ... இங்கு குறிப்பிடத் தகுந்த ஒன்று இருக்கிறது: இயேசு மனிதர்களின் ஒப்புதலைத் தேடி வரவில்லை, மாறாக, இறுதியில் அவர் பிலாத்துவிடம் கூறுவது போன்று, "உண்மையை எடுத்துரைக்கவே" (யோவான் 18:37) வந்தார். உண்மை இறைவாக்கினர் கடவுளைத் தவிர வேறு எதற்கும் கீழ்ப்படிவதில்லை, உண்மைக்கான பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்வார், அதற்காக தங்களை இழக்கவும் தயாராக இருப்பார். இயேசு அன்பின் இறைவாக்கினராக இருக்கிறார் என்பது உண்மை, ஆனால் அன்பு தனக்கென தனிப்பட்ட உண்மையைக் கொண்டிருக்கிறது. உண்மையில், அன்பும் உண்மையும் ஒரே செயல்பாட்டு மற்றும் கடவுளின் இரு பெயர்கள். இன்றைய திருவழிபாட்டில் புனித பவுல் இவ்வாறு கூறுகிறார்: "அன்பு ... தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்" (1 கொரிந்தியர் 13:4-6).
   கடவுளில் நம்பிக்கை கொள்வதற்கு தங்கள் வேறுபாடுகளைக் களைந்து, நாசரேத்து இயேசு என்ற மனிதரில் அவர் வெளிப்படுத்திய நிலையான முகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வழி அவரைக் கண்டறிந்து, மற்றவர்களில் அவருக்கு சேவை செய்ய இட்டுச் செல்லும். இதுவே மரியாவின் மனநிலையில் ஒளிர்ந்தது. அவரை விடவும் இயேசுவின் மனிதத்தன்மையைப் பற்றி அதிகம் அறிந்தவர் யார்? ஆனால் அவள் நாசரேத்து ஊர்க்காரர்களைப் போன்று ஒருபோதும் அதிர்ச்சி அடைந்தது இல்லை. விசுவாசத்தின் வழியை மீண்டும் மீண்டும் வரவேற்கும் மறைபொருளை அறிந்து, சிலுவையின் இரவு மற்றும் உயிர்ப்பின் முழுமை ஒளி வரையிலும் தன் மனதில் பேணி காத்து வந்தார். இந்த உண்மையின் வழியில் மகிழ்ச்சியோடு நடக்க மரியா நமக்கும் உதவுவார்.