Wednesday, February 6, 2013

பிப்ரவரி 6, 2013

அன்போடும் உரிமையோடும் தாம் படைத்தவற்றின்
மீது கடவுள் அக்கறை கொள்கிறார் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், கடவுளின் படைப்பை பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கடவுளை 'எல்லாம் வல்ல தந்தை'யாக விவரிக்கும் விசுவாச அறிக்கை, விவிலியத்தின் தொடக்கத்தை உறுதி செய்யும் வகையில், 'விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்தவர் அவரே' என்று தொடர்கிறது. திருமறை நூலின் முதல் வசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: " தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்" (தொடக்கநூல் 1:1). கடவுள் அனைத்துக்கும் மூலமாக இருப்பதிலும், படைப்பின் அழகிலும், அன்பு தந்தையான அவரது எல்லையற்ற ஆற்றலை காண்கிறோம்.
   படைப்பில் தந்தையாகவும், உயிரின் தொடக்கமாகவும், படைப்பதில் அவரது எல்லையற்ற ஆற்றலை வெளிப்படுத்துபவராகவும் கடவுள் இருக்கிறார். ஒரு வலிமையுள்ள நல்ல தந்தையைப் போன்று, ஒருபோதும் குறைவுபடாத அன்போடும் உரிமையோடும் தாம் படைத்தவற்றின் மீது அக்கறை கொள்கிறார். எனவே, ஆண்டவரின் எல்லையற்ற ஆற்றலையும், அவரது நன்மைத்தனத்தையும் அறிந்து அடையாளம் காணும் இடமாக படைப்பு உள்ளது, மேலும் கடவுளை படைப்பாளராக பறைசாற்றும் நம்பிக்கையாளர்களாகிய நமக்கு விசுவாசத்தின் அழைப்பாகவும் மாறுகிறது. எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் எழுதுவது போன்று, "உலகம் முழுமையும் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்றும் காணப்படாதவற்றினின்று காணப்படுகிறவை உண்டாயின என்றும் நம்பிக்கையாலேயே புரிந்து கொள்கிறோம்" (11:3). காணக்கூடிய உலகத்தின் கூறுகளை கண்டறிவதில் இருந்து, காணப்படாதவற்றை அடையாளம் காண முடிவதே விசுவாசம். நம்பிக்கையாளரால் இயற்கையின் மாபெரும் புத்தகத்தை படித்து, அதன் மொழியைப் புரிந்துகொள்ள முடியும். விசுவாசத்தை தூண்டியெழுப்பும் கடவுளின் வெளிப்பாட்டு வார்த்தை நமக்கு தேவை, அதன் மூலம் கடவுள் படைப்பாளராகவும், தந்தையாகவும் இருக்கும் உண்மையைப் பற்றிய முழு விழிப்புணர்வை அடைய முடியும்.
   திருமறை நூலில், உலகத்தை புரிந்துகொள்வதற்கான அம்சங்களை மனித அறிவு விசுவாசத்தின் ஒளியில் கண்டுணர முடியும். தொடக்கநூலின் முதல் அதிகாரம் கடவுளின் படைப்புச் செயலைப் பற்றி எடுத்துரைப்பதில் சிறப்பிடம் பெறுகிறது. கடவுள் ஆறு நாட்களில் படைப்புகளை நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுளின் முதல் சிந்தனை, தமது அன்புக்கு பதிலளிக்கும் அன்பை கண்டறிவதாக இருந்தது. இரண்டாவது, பொருள் சார்ந்த உலகைப் படைத்து அவருக்கு சுதந்திரமாக பதிலளிக்கும் உயிரினங்களில் அந்த அன்பை நிறுவுவதாக இருந்தது. இதையே ஆறு முறை மீண்டும் மீண்டும் வரும் வசனம் எடுத்துரைக்கிறது: "கடவுள் அது நல்லது என்று கண்டார்." மனிதனின் படைப்பு நிறைவடைந்ததும் ஏழாவது முறையாக இவ்வாறு வருகிறது: "கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன" (1:31). கடவுள் படைத்த அனைத்துமே நல்லதாகவும், அழகானதாகவும், ஞானத்தாலும் அன்பாலும் நிறைந்ததாகவும் இருக்கின்றன. கடவுளின் படைப்புச் செயல் ஒழுங்கையும், ஒருங்கிணைவையும், அழகையும் கொண்டு வருகிறது. திருப்பாடல் ஆசிரியர் பாடுவது போன்று, "ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின ... அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது" (33:6,9). அனைத்தும் கடவுளின் வாக்குக்கு கீழ்ப்படிவதாலேயே, வாழ்வு வழங்கப்படுகிறது, உலகம் நிலைத்திருக்கிறது.
   இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப காலத்திலும் படைப்பை பற்றி பேசுவது அறிவுப்பூர்வமானதாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தொடக்கநூலின் புனைவுகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? தொடக்கநூலில் உள்ள கதைகள், கடவுளின் முடிவற்ற காரணமாகிய வார்த்தையாலேயே இந்த பிரபஞ்சம் தோன்றி நிலைத்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த காரணத்தில் இருந்து, படைப்பாளரான ஆவியால் உலகின் வடிவமைப்பு பிறக்கிறது. உலகின் தோற்றமும், நமது தோற்றமும் பகுத்தறிவுக்கு எதிரானதாகவோ தேவையற்றதாகவோ இல்லாமல், காரணத்தோடும், அன்போடும், சுதந்திரத்தோடும் அமைந்துள்ளது என்பதை மறைநூல் நமக்கு கூறுகிறது. இந்நிலையிலேயே நாம் நம்புகிறோம். படைப்புகள் அனைத்துக்கும் உச்சமாக, "தங்களைப் படைத்தவரை அறிந்து, அன்பு செய்யும் திறன்பெற்ற" மனித ஆணும் பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர் என்பதை கூற விரும்புகிறேன். "உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?" என்று திருப்பாடல் (8:3-4) ஆசிரியர் வினவுகிறார். பிரபஞ்சத்தோடு ஒப்பிடும்போது மனிதன் சிறியவனாக இருந்தாலும், கடவுளின் நிலையான அன்பின் திருவுளம் அவனில் நிறைவேறுகிறது.
   தொடக்கநூலில் உள்ள படைப்பு பற்றிய கதைகள், மனிதருக்கான கடவுளின் திட்டத்தை நாம் அறிந்துகொள்ள உதவுகிறது. அனைத்துக்கும் மேலாக இந்த பூமியின் தூசியில் இருந்து கடவுள் மனிதரைப் படைத்தார் என்பதை அவை உறுதிபடுத்துகின்றன. நாம் கடவுள் அல்ல, நாம் நம்மை உண்டாக்கி கொள்ளவில்லை, படைப்பாளரின் வேலைப்பாட்டால் நல்ல நிலத்தில் இருந்து நாம் உரு பெற்றிருக்கிறோம் என்பதை இது உணர்த்துகிறது. மேலும், பண்பாடு, வரலாறு மற்றும் சமூக வேறுபாடுகளைத் தாண்டி மனிதர் அனைவரும் தூசியாக இருக்கின்றனர், நாம் அனைவரும் கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரே பூமியில் உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்ற அடிப்படை உண்மை தெளிவாகிறது. இரண்டாவது, நிலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட உடலில் கடவுள் தம் உயிர்மூச்சை அளித்ததால் மனிதகுலம் தோன்றியது. மனிதர் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் கடவுளிடம் வந்த வாழ்வின் மூச்சை நம்மில் சுமக்கிறோம், ஒவ்வொரு மனித வாழ்வும் கடவுளின் சிறப்பு பாதுகாப்பைப் பெற்றிருக்கிறது. இதன் காரணாமாக, மனித மாண்பை கறைபடுத்தாமல் பாதுகாப்பது ஆழ்ந்த தேவையாக இருக்கிறது.
   தொடக்கநூலின் முதல் அதிகாரங்களில், நன்மை, தீமை அறியும் மரத்தையும், பாம்பையும் கொண்ட தோட்டம் பற்றி காண்கிறோம். கடவுள் மனிதரை பாதுகாப்பான, உணவளிக்கக்கூடிய, வாழ்வதற்கு ஏற்ற இடத்தில் வைத்தார் என்பதை இந்த தோட்டம் நமக்கு கூறுகிறது. மனிதர் உலகத்தை தமது சொத்தாக கருதி கொள்ளையிடவும் சுரண்டவும் துணியாமல், அது படைத்தவரின் கொடையாகவும், அவரது மீபளிக்கும் திருவுளத்தின் அடையாளமாகவும் இருப்பதை உணர்ந்து, கடவுளின் திட்டத்துக்கு ஏற்ப இசைந்து வாழ வேண்டும். தோட்டத்தில் காணப்படும் பாம்பு ஒரு கேள்வியின் வழியாக, கடவுளுடனான உடன்படிக்கையில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த சோதனையால், படைப்பு பொருளுக்குரிய எல்லைகளையும், நமை, தீமைக்குரிய எல்லைகளையும் கடந்து, கடவுளின் படைப்பு அன்பைச் சார்ந்திருப்பதை சுமையாக கருதும் சொந்த உலகத்தில் வாழ நேரிடுகிறது. அவருடைய இடத்தில் நம்மை வைப்பதால் கடவுளுடனான உறவு பாதிக்கப்பட்டு, மற்ற அனைத்து உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஆதாம் ஏவாள் மீது குற்றம் சுமத்துகிறான். இருவரும் கடவுள் முன்னிலையில் இருந்து தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். தன சகோதரனான ஆபேலை கொலை செய்யும் அளவுக்கு காயினுக்கு பொறாமை உருவாகிறது. தன்னை படைத்தவருக்கு எதிராக மனிதன் செல்லும்போது, தனக்கு எதிராகவும் செல்கிறான், தனது தொடக்கத்தையும் அதனால் உண்மையையும் மறுப்பதால் வலி மற்றும் மரணத்துடன் உலகில் தீமை நுழைகிறது. கடவுள் படைத்த அனைத்தும் நன்றாக, உண்மையில் மிக நன்றாக இருந்தும், மனிதனின் உண்மைக்கு எதிரான முடிவுகளால், உலகில் தீமை நுழைந்தது.
   இறுதியாக, தொடக்க [ஜென்ம] பாவத்தின் உண்மை நிலையைப் பற்றி பார்ப்போம். எந்த மனிதரும் தம்மில் தாமாகவே வாழ்ந்துவிடுவது இல்லை, பிறப்பில் மட்டுமன்றி, ஒவ்வொரு நாளும் நாம் மற்றவரிடமிருந்து வாழ்வைப் பெறுகிறோம். கடவுள் மற்றும் பிறருடனான அன்புறவிலேயே நமது தனித்தன்மை தெளிவாகிறது. கடவுளின் இடத்தில் நம்மை வைக்கும்போது, பாவத்தின் இருப்பு கடவுளுடனான நமது அடிப்படை உறவை பாதித்து அழிக்கிறது. முதல் பாவத்தைப் பற்றி கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி இவாறு கூறுகிறது: மனிதன் "கடவுளுக்கு மேலாகவும் எதிராகவும், தனது படைப்புப்பொருள் நிலைக்கும், தனது நன்மைக்கும் எதிரானதைத் தானே தேர்ந்தெடுத்தான்." ஒருமுறை அடிப்படை உறவு பாதிக்கப்பட்டதால், உறவுகளின் மற்ற தூண்களும் பாதிப்புக்கு ஆளாயின, பாவம் அனைத்தையும் அழித்துவிட்டது. தொடக்கத்தில் இருந்தே மனிதகுலத்தின் உறவு அமைப்பு பாதிக்கப்பட்டு இருப்பதால், உலகில் நடைபோடும் ஒவ்வொரு மனிதரும் இந்த உறவுநிலை பாதிப்பை சுமக்கிறார். பாவத்தால் கறைபட்ட உலகில் நுழைவதால் அவரும் தனிப்பட்ட விதத்தில், தொடக்க பாவத்தினால் காயப்பட்ட மனித இயல்பினால் அடையாளம் இடப்பட்டிருக்கிறார்.
   இந்த காயப்பட்ட நிலையில் இருந்து மீண்டுவர மனிதரின் சொந்த பலத்தால் முடியவில்லை. ஆதாமுக்கு எதிரான பாதையைத் தேர்ந்தெடுத்த இயேசு கிறிஸ்துவால் கடவுளுடனான நல்லுறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் புனித பவுல் கூறுவது போன்று, ஆதாம் தான் படைப்புப்பொருள் என்பதை உணராமல் கடவுளின் இடத்தில் தன்னை வைக்க விரும்பிய வேளையில், கடவுள் வடிவில் விளங்கிய இயேசு கிறிஸ்து, தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்றதுடன், அன்பின் பாதையில் பயணித்து, கடவுளுடனான உறவை ஒழுங்குபடுத்த சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு தம்மையே தாழ்த்தினார். எனவே, கிறிஸ்துவின் சிலுவை புதிய வாழ்வின் மரமாக மாறியுள்ளது. அன்பு சகோதர சகோதரிகளே, விசுவாசத்தில் வாழ கடவுளின் மேன்மையைக் கண்டுணர்ந்து, படைப்புப் பொருளுக்குரிய நமது சிறுமையை ஏற்றுக்கொண்டு, ஆண்டவர் தமது அன்பால் நிரப்ப நம்மை அர்ப்பணிப்போம்.