Sunday, February 10, 2013

பிப்ரவரி 10, 2013

கிறிஸ்துவை அனைத்து மனிதருக்கும் அறிவிப்பதில்
ஒருபோதும் சோர்வுறக்கூடாது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சீமோன் பேதுருவின் அழைப்பை பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்றைய திருவழிபாட்டில், முதல் சீடர்கள் அழைக்கப்பட்ட நிகழ்வை லூக்கா நற்செய்தி வழங்குகிறது. இயேசு மக்கள் கூட்டத்துக்கு கற்பித்து, பெருந்திரளான மீன்களைப் பிடிக்கச் செய்த பிறகு, ஆண்டவரின் திருவுளத்துக்கு ஏற்ப இந்த அழைப்பு நிகழ்கிறது. உண்மையில், இயேசுவின் வார்த்தையைக் கேட்பதற்காக கெனசரேத்து ஏரிக்கரையில் இந்த மக்கள் கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்தபோது, இரவு முழுவதும் எதுவும் கிடைக்காமல் சோர்வுற்றிருந்த சீமோனை அவர் காண்கிறார். கரையில் இருந்து சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த மக்களுக்கு போதிப்பதற்காக இயேசு முதலில் அவரது படகை கேட்கிறார்; பிறகு, போதனையை முடித்ததும், அவர் சீமோனிடம் அவரது நண்பர்களுடன் ஆழத்திற்கு போய், மீன் பிடிக்க வலைகளைப் போடுமாறு கட்டளையிடுகிறார். சீமான் கீழ்படிந்ததால், அவர்கள் பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். இவ்வாறு, அற்புத அடையாளங்களின் வழியாக முதல் சீடர்கள் எப்படி இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள், அவரில் நம்பிக்கை வைத்தார்கள், அவரது வார்த்தையின்படி நடந்தார்கள் என்பதை நற்செய்தியாளர் காட்டுகிறார். இந்த அடையாளத்துக்கு முன் தன்னைப் பற்றி இயேசுவிடம் பேசும் சீமோன், அவரை "ஐயா" என்று அழைத்துக் கொண்டிருந்தார், பின்னரோ அவர் அவரை "ஆண்டவர்" அழைக்கிறார். இது கடவுளின் அழைப்பினை உணர்த்தும் நிலை, இதில் தேர்ந்தேடுக்கப்படுபவரின் தரமல்ல, "உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்ற சீமோனைப் போன்ற விசுவாசமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
   மீனின் வடிவம் திருச்சபையின் பணியைக் குறிப்பதாக உள்ளது. இது பற்றி புனித அகுஸ்தீன் இவ்வாறு கூறுகிறார்: "ஆண்டவரின் கட்டளைக்கு ஏற்ப சீடர்கள் இரண்டு முறை மீன்பிடிக்கச் செல்கிறார்கள்: ஒருமுறை பாடுகளுக்கு முன்பு, அடுத்தது உயிர்ப்புக்கு பின்பு. மீன்பிடிக்கும் இந்த இரண்டு காட்சிகளில், முழு திருச்சபையும் அடையாளப்படுத்தப்படுகிறது: தற்போது உள்ளதும், இறந்து உயிர்த்தெழுதலுக்கு பிந்தியதுமான திருச்சபை. இப்போது இது பெருந்திரளானவர்களை, நல்லோரும் தீயோருமான எண்ணற்றவர்களை ஒன்றாக கொண்டுள்ளது; உயிர்த்தெழுதலுக்கு பின் நல்லோரை மட்டுமே கொண்டிருக்கும்." பேதுருவின் இந்த அனுபவம் தனித்தன்மை வாய்ந்தது, இருப்பினும் நற்செய்தியின் அனைத்து திருத்தூதர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவர் கிறிஸ்துவை உலகின் கடையெல்லை வரை உள்ள அனைத்து மனிதருக்கும் அறிவிப்பதில் ஒருபோதும் சோர்வுறக்கூடாது. அனைத்துக்கும் மேலாக, இன்றைய வாசகம் குருத்துவம் மற்றும் அர்ப்பண வாழ்வுக்கான அழைப்பை பற்றி எடுத்துரைக்கிறது. தனது வாழ்க்கை நிலையை முடிவு செய்வது மனிதருக்கு உரியதல்ல; அது கடவுளின் அழைப்புக்கான பதில்மொழி. கடவுள் அழைக்கும்போது, மனித பலவீனம் பயப்படக்கூடாது. நமது ஏழ்மையில் செயலாற்றும் அவரது நம்பிக்கையின் பலம் தேவை; உருமாற்றுவதும் புதுப்பிப்பதுமான அவரது இரக்கத்தின் வல்லமையை அதிகமதிகமாக நாம் சார்ந்திருக்க வேண்டும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, நற்செய்தியை அறிவிப்பதற்கும், அதற்கு சான்று பகர்வதற்கும் தேவையான தைரியம், நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை நம்மிலும்  நமது கிறிஸ்தவ சமூகங்களிலும் கடவுளின் இந்த வார்த்தையால் புத்துயிர் பெறட்டும். தோல்விகளும் துன்பங்களும் சோர்வுக்கு இட்டுச் செல்லக்கூடாது: நாம் விசுவாசத்தோடு வலைகளைப் போடுவது நமது பணி - மற்றவற்றை ஆண்டவர் செய்வார். திருத்தூதர்களின் அரசியான கன்னி மரியாவின் பரிந்துரையிலும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆண்டவரின் அழைப்புக்கு, அவர் தனது சிறுமைநிலையை உணர்ந்தவராய், முழு நம்பிக்கையோடு பதிலளித்தார்: "இதோ நானிருக்கிறேன்." அந்த தாயின் உதவியோடு, தலைவரும் ஆண்டவருமான இயேசுவை பின்பற்றுவதற்கான நமது விருப்பத்தை புதுப்பிப்போம்.