Wednesday, March 7, 2012

மார்ச் 7, 2012

நம் துன்ப வேளைகளில் மௌனத்தின் வழியாக
இறைவன் நம்மோடு பேசுகிறார் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க, தனது புதன் பொது மறைபோதகத்தை தொடங்கிய திருத் தந்தை 16ம் பெனடிக்ட், அர்மீனிய கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள் மாநாட்டுக்காக உரோம் நகர் வந்திருக்கும் அத்திருச்சபைத் தலைவர்களை வாழ்த்திய பின்பு, இயேசுவின் செபம் குறித்த தன் மறைபோதகத்தின் நிறைவுரையை வழங்கினார்.
   இயேசுவின் செபம் குறித்த மறைபோதக
ங்களின் நிறைவாக இன்று, இறைவனுடன் நாம் கொள்ளும் உறவில் மௌனத்தின் முக்கி யத்துவத்தைப் பற்றி உரையாட விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் வாழ்விலும் செபத்திலும், குறிப்பாக அவரின் சிலுவை அனுபவத்தில், வார்த்தையும் மௌனமும் தொடர்ந்து ஒன்றையொன்று இடைமறித்து ஒன்றுக்குள் ஒன்றாய் வருவதைக் காண்கிறோம். சிலுவையில், மரணத்தருவாயில் இயேசு கொண்ட மௌனமே இறைத் தந்தைக்கு அவர் தந்த இறுதி வார்த்தை. அதுவே அவரின் உன்னத செபம்.
   இறைவனின் வார்த்தைக்கு நாம் செவிமடுக்க வேண்டுமெனில் நம் அகம், புறம் இரண்டிலும் மௌன விதையிட்டு வளர்க்க வேண்டும். அப்போது, இறைவனின் வார்த்தைகள் நம் இதயத்தில் எதிரொலித்து நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும். நம் துன்பகரமான வேளைகளில் இறைவன் தன் மௌனத்தின் வழி நம்மோடு பேசுகிறார் என்பதை இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார். நம் துன்பத்தில் இறைவனின் மௌனம், நமது விசுவாசத்தினை ஆழப்படுத்தவும், அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கைக் கொள்ளவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
   இயேசுவே நம் உயரிய செப ஆசிரியர். வானகத்தந்தையின் அன்புக்குரிய குழந்தை களாக முழு நம்பிக்கையுடன் அவரோடு உரையாட இயேசுவின் செபத்திலிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம். இறைவனின் பல்வேறு கொடைகளைக் கண்டு கொள்ளவும், அவரின் விருப்பத்திற்குப் பணியவும், குழந்தைகளுக்குரிய இந்த உரையாடலில் நாம் கற்பிக்கப்படுகிறோம். இதுவே நமது வாழ்வுக்கான அர்த்தத்தையும் வழியையும் தருகிறது.
   புதன் மறைபோதகத்தின் இறுதியில், அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.