Saturday, March 30, 2013

மார்ச் 29, 2013

அன்பையும், மன்னிப்பையும் நமது இதயங்களில்
சுமந்து நடப்போம் - திருத்தந்தை

   புனித வெள்ளிக்கிழமை மாலை ரோமின் கொலோசியம் திடலில் நடைபெற்ற சிலுவைப் பாதையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய முடிவுரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   இவ்வளவு பேர் இங்கு திரண்டு வந்து, இந்த ஆழமான செபத்தில் கலந்துகொண்டதற்காக நன்றி கூறுகிறேன். ஊடகங்கள் வழியாக இச்செபத்தில் இணைந்தவர்களுக்கு, சிறப்பாக, உடல் நலமற்றோர், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.
   நான் அதிக வார்த்தைகளைச் சேர்க்க விரும்பவில்லை. இந்த மாலைப் பொழுதுக்கு ஒரு வார்த்தை போதும். அதுதான் சிலுவை. உலகின் தீமைக்கு இறைவன் தந்த பதில் சிலுவை. சில வேளைகளில், தீமைக்கு இறைவன் பதிலளிக்காமல் மௌனம் காப்பதுபோல் தெரியலாம். ஆனால், இறைவன் பதிலளித்துவிட்டார். அவர் தந்த பதில் கிறிஸ்துவின் சிலுவை: அன்பு, கருணை, மன்னிப்பு ஆகியவற்றைக் கூறும் ஒரு வார்த்தை இது. இது இறைவனின் தீர்ப்பையும் வெளிப்படுத்துகிறது, அதாவது, கடவுள் நம்மை அன்பு செய்வதன் வழியாக தீர்ப்பிடுகிறார். இதை நினைவில் கொள்ளுங்கள்: கடவுள் நம்மை அன்பு செய்வதன் வழியாக தீர்ப்பிடுகிறார். அவரது அன்பை நான் அரவணைத்தால், நான் மீட்படைகிறேன். அதை நான் மறுத்தால், தண்டனைக்குள்ளாகிறேன். அவரால் நான் தண்டனை பெறவில்லை, நானே என்னைத் தண்டனைக்குள்ளாகுகிறேன். ஏனெனில், இறைவன் ஒருபோதும் தண்டனை தீர்ப்பு அளிப்பதில்லை. அன்பு செய்வதும், காப்பாற்றுவதும் மட்டுமே அவர்.
   அன்பு சகோதர சகோதரிகளே, உலகிலும், நமக்குள்ளும் இருந்து செயலாற்றும் தீமைக்கு கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில் - சிலுவை என்ற சொல்லே. தீமைக்கு கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில் - இயேசுவைப் போல் சிலுவையை ஏற்பது. லெபனான் நாட்டு சகோதர, சகோதரிகள் அளித்த சாட்சியத்தை இன்று மாலை சிலுவைப்பாதையில் நாம் கேட்டோம். அவர்களே இன்றைய சிந்தனைகளையும், செபங்களையும் உருவாக்கினர். அவர்கள் செய்த இப்பணிக்கும், அவர்கள் அளித்த சாட்சியத்திற்கும் நமது இதயம் நிறைந்த நன்றியைக் கூறுகிறோம். லெபனான் நாட்டுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சென்றபோது, இந்த சாட்சியத்தை நம்மால் காண முடிந்தது. அந்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் வலுவான ஒன்றிப்பையும், அவர்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுடனும், பிறருடனும் கொண்டிருக்கும் நட்புறவையும் நம்மால் காண முடிந்தது. மத்தியக் கிழக்குப் பகுதிக்கும், உலகிற்கும் நம்பிக்கை தரும் ஓர் அடையாளமாய் அத்தருணம் அமைந்தது.
   தற்போது நம் அன்றாட வாழ்வில் சிலுவைப் பாதையைத் தொடர்கிறோம். அனைவரும் இணைந்து இச்சிலுவைப் பாதையில் நடப்போம். அன்பையும், மன்னிப்பையும் நமது இதயங்களில் சுமந்து நடப்போம். இயேசுவின் உயிர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போம். அவர் நம் அனைவரையும் மிக அதிகமாக அன்பு செய்கிறார். அவரே முழுமையான அன்பு.
   இந்த உரைக்குப் பின், அங்கு கூடியிருந்த பல்லாயிரம் மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆசீர் அளித்தார்.