Wednesday, August 29, 2012

ஆகஸ்ட் 29, 2012

புதன் மறைபோதகம்: செபத்தின் வழியாகவே சான்று
பகர்வதற்கு நாம் பலம் பெறுகிறோம் - திருத்தந்தை

   கோடைவிடுமுறை காலத்தை காஸ்தல் கந்தல்போ வில் செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்று திருச்சபை சிறப்பித்த 'புனித திருமுழுக்கு யோவானின் மறைசாட்சிய மரணம்’ குறித்து புதன் பொது மறைபோதகத்தில் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
   புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பை ஜூன் மாதம் 24ம் தேதியும், அவரின் மறைசாட்சிய மர ணத்தை ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதனான இன் றும் சிறப்பிக்கின்றோம். திருச்சபையின் உரோமன் நாட்காட்டியில், ஒருவரின் பிறப்பும் இறப்பும் சிறப்பிக்கப்படுவது இப்புனிதருக்கு மட்டுமே. புனித லூக்கா எழுதிய நற் செய்தியில், திருமுழுக்கு யோவானின் பிறப்பு, அவர் மேற்கொண்ட பாலைவன வாழ்வு, அவரது போதனை ஆகியவைகளையும், மாற்குவின் நற்செய்தியில், திருமு ழுக்கு யோவானின் மரணம் குறித்தும் வாசிக்கின்றோம். திபேரியு சீசர் ஆட்சி செய்து வந்த காலத்தில் மக்களை நோக்கி, மனம் திரும்ப அழைப்பு விடுத்து போதித்த திருமுழுக்கு யோவான், அதோடு நிறுத்தி விடவில்லை. 'இதோ! கடவுளின் ஆட்டுக் குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்' என இயேசுவைக் குறித்து சாட்சியம் பகர்கிறார். இறுதியாக, இறைக் கட்டளைகளுக்கு விசுவாசமாக இருப்பதற்கு, தன் இரத்தம் சிந்துதல் மூலம் புனித திருமுழுக்கு யோவான் சான்று பகர்ந்தார். உண்மை மீதான அன்பின் சாட்சியமாக அது இருந்தது.
   புனித திருமுழுக்கு யோவான், செபத்தின் மனிதர் மட்டுமல்ல, இறைவனுடன் நாம் கொள்ளும் உறவுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறார். இயேசு செபிக்கக் கற்றுக் கொடுக்கும் முன்னர், அவருடைய சீடர்களுள் ஒருவர் 'ஆண்டவரே, யோவான் தன் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொ டும்' என இயேசுவை நோக்கி வேண்டியதை புனித லூக்கா எடுத்துரைக்கிறார். செபம் என்பது நேரத்தை வீணடிப்பது அல்ல, அதற்கு நேர் எதிரானது. ஏனெனில், செபத்தின் வழியாகவே நாம், அன்பான, அமைதியான ஒரு வாழ்வைப் பெறுவதற்கும், துன்பங் களை மேற்கொள்வதற்கும், துணிவுடன்
சான்று பகர்வதற்கும் தேவையான பலத்தை இறைவனிடமிருந்து பெறுகிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசு நுழைந்து, அதன்வழி அவரைக் குறித்து இவ்வுலகிற்கு நாம் பறைசாற்ற உதவும் பொருட்டு புனித திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவோம்.
   இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, August 26, 2012

ஆகஸ்ட் 26, 2012

நாங்கள் நம்பிக்கையால் புரிந்துகொள்கிறோம்
புரிந்துகொள்வதற்காக நம்புகிறோம் - திருத்தந்தை

  திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்ல மான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றிய தன் கருத்தை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கடந்த சில வாரங்களாக, இயேசு தன்னை வாழ்வு தரும் உணவாக வெளிப்படுத்தியது குறித்து சிந்தித் தோம். அது குறித்த சீடர்களின் பதில் செயல்பாட்டை இன்றைய நற்செய்தி நமக்கு தருகிறது. முதலாவதாக நற்செய்தியாளர் யோவான் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: "அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை." ஏனெனில், "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்" என்ற இயேசுவின் வார்த்தைகளை அவர்கள் நம்பவில்லை. அவரது புதிய உடனிருப்பான நற்கருணை பற்றிய இந்த வெளிப்பாடு அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில், உலகின் மீட்புக்காக இயேசு தன்னையே கொடுக்கும் பாஸ்கா மறைபொருளை முன்னுரைத்த இந்த வார்த்தைகளை அவர்கள் பொருள் சார்ந்த முறையில் சிந்தித்தார்கள்.
   சீடருள் பலர் தன்னை விட்டு விலகியதைக் கண்ட இயேசு திருத்தூதர்களிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். பன்னிருவரின் சார்பாக பேதுரு, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த் தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங் கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்" என்றார். இதற்கு புனித அகுஸ்தீன் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்: "கடவுளின் அருளாலும், தூய ஆவியின் தூண் டுதலாலும் பேதுரு புரிந்துகொண்டதைப் பார்க்கிறீர்களா? அவர் ஏன் புரிந்துகொண் டார்? ஏனெனில் அவர் நம்பினார். நீர் நிலைவாழ்வு தரும் வார்த்தைகளைக் கொண் டிருக்கிறீர். நீர் உமது உயிர்த்தெழுந்த உடலையும் இரத்தத்தையும், உம்மை முழுவ துமே எங்களுக்கு தருவதன் வழியாக, எங்களுக்கு நீர் நிலைவாழ்வை அளிக்கின்றீர். நாங்கள் நம்பிக்கையால் புரிந்துகொள்கிறோம். நாங்கள் புரிந்துகொள்வதற்காக நம்பு கிறோம். நாங்கள் எதை நம்புகிறோம்? நாங்கள் எதைப் புரிந்துகொள்கிறோம்? கடவு ளின் மகனாகிய கிறிஸ்து நீரே, அதாவது, உமது சதையிலும் இரத்தத்திலும் நீர் அளிக் கும் உண்மையான நிலைவாழ்வு நீரே."
   இறுதியாக, பன்னிரு திருத்தூதர்களிலும் ஒருவர் அதாவது யூதாஸ் நம்பிக்கை கொள்ளவில்லை என்பது இயேசுவுக்கு தெரியும். யூதாஸ் உண்மையுள்ளவனாக இருந்திருந்தால், பல சீடர்கள் விலகிச் சென்றதைப் போல விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவன் இயேசுவோடு இருந்தான். விசுவாசத்தாலோ, அன்பாலோ அவன் தொடர்ந்து அங்கு இருக்கவில்லை, மாறாக குருவைப் பழிவாங்கும் நோக்கத் துடன் இருந்தான். இயேசுவால் காட்டிக்கொடுக்கப்பட்டதாக யூதாஸ் உணர்ந்ததால், அவரைக் காட்டிக்கொடுக்க அவன் முடிவெடுத்தான். யூதாஸ் ஒரு தீவிரவாதியாக வும், உரோமையருக்கு எதிராக புரட்சி செய்து வெற்றிபெறும் மெசியாவை விரும்பு பவனாகவும் இருந்தான். இந்த எதிர்பார்ப்புகள் இயேசுவை ஏமாற்றம் அடையச் செய் தன. பிரச்சனை என்னவென்றால் யூதாஸ் விலகிச் செல்லவில்லை, அலகையின் குறியைக் கொண்டவனாக பொய்மையில் இருந்ததே அவனது மிகப்பெரிய தவறு. எனவேதான் இயேசு பன்னிருவரைப் பார்த்து, "உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்" என்றார். புனித பேதுருவைப் போல இயேசுவில் நம்பிக்கை கொள்ள வும், எப்பொழுதும் அவரிலும் அனைத்து மக்களிடமும் அக்கறை கொள்ளவும் கன்னி மரியா நமக்கு உதவுமாறு செபிப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Wednesday, August 22, 2012

ஆகஸ்ட் 22, 2012

கடவுளுக்கு தன்னையே கொடையாக கொடுத்து
வாழ்ந்த அன்பின் அரசி மரியா - திருத்தந்தை

   திருத்தந்தையரின் காஸ்தல் கந்தல்போ கோடை விடுமுறை இல்லத்தில் விடுமுறை நாட்களைச் செல விட்டு வரும் திருத் தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று வழங்கிய பொது மறை போதகத்தில் அரசியான அன்னை மரியாவின் திருவிழா பற்றிய சிந்தனைகளைப் பல மொழிகளில் பகிர்ந்து கொண்டார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   தூய கன்னிமரியாவை 'அரசி' என அழைத்துப் போற்றிய பக்தி முயற்சி பழங்காலத்திலே இருந்து வந்தாலும், இதனைத் திருவிழாவாகச் சிறப்பிக்கும் பழக்கம் அண் மையில்தான் ஏற்படுத்தப் பட்டது. 1954ல் மரியா ஆண்டு சிறப்பிக்கப்பட்டபோது அவ்வாண்டின் இறுதியில் திருத்தந்தை 12ம் பயஸ் இத்திரு விழாவை அறிவித்து, அவ்விழா நாள் மே மாதம் 31ம் தேதி என்றும் குறித்தார். ஆயினும், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்துக்குப் பின்னர் திருவழிபாட்டு நாள்காட்டியில் ஏற்பட்ட மாற்றத்தினால் இத்திருவிழா, மரியின் விண்ணேற்புக்கு எட்டு நாள்கள் கழித்து கொண்டாடப்படுகின்றது. மரியாவின் அரசுரிமைக்கும், அவர் ஆன்மா வோடும் உடலோடும் மகிமைப்படுத்தப்பட்டு அவரது திருமகனுக்கு அருகில் அமரு வதற்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவை இந்தத் தேதி மாற்றத்தில் நாம் உணர முடிகின்றது. லூமென் ஜென்சியும் என்ற திருஅவை பற்றிய மறைக்கொள்கைத் திரட்டு எண் 59லும், “மரியா விண்ணுலக மாட்சிக்கு எடுத்துச்செல்லப் பெற்றார். அனைத்துலக அரசியாக இறைவனால் உயர்த்தப் பெற்றார். ஏனெனில் தன் மகனுக்கு அதிக நிறைவாக ஒத்தவராகுமாறு இவ்வாறு உயர்த்தப் பெற்றார்” எனச் சொல்லப் பட்டுள்ளது. மரியா இவ்வுலகப் பயணத்திலும் விண்ணக மகிமையிலும் தன் மகனோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருப்பதால் அவர், அரசியாக இருக்கிறார். இதுவே இந்த விழாவுக்கு அடிப்படை ஆதாரமாக அமைகின்றது. சிரியா நாட்டு புனித எப்ரேம் சொல்லியிருப்பது போன்று, மரியாவின் அரசுரிமை அவரது விண்ணகத் தாய்மையிலிருந்து வருகிறது; இவர் அரசர்க்கெல்லாம் அரசராகிய ஆண்டவரின் அன்னை; நமது வாழ்வாகவும், மீட்பாகவும், நம்பிக்கையாகவும் இயேசுவை நமக்கு காட்டுகின்றார்.
   மரியா எவ்வகையான அரசி என்ற கேள்விக்குரிய பதில், இந்தப் பூவுலகின் மற்றும் வரலாற்றின் ஆண்டவராகிய அவரது திருமகனிடம் இருக்கின்றது. கிறிஸ்துவின் அரசு ரிமை தாழ்ச்சியிலும் பணியிலும் அன்பிலும் ஆனது. பிலாத்துவின் முன்னிலையில், கிறிஸ்து தமது திருப்பாடுகளின்போது அரசராக அறிவிக்கப்பட்டார். அவரது அரசுரிமை இவ்வுலக அதிகாரங்களோடு தொடர்பில்லாதது. இயேசு அரசர். இந்த அரசர், இறுதி இரவுணவில் தம் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவி அவர்களுக்கு விளக்கியது போல, தனது பணியாளர்களுக்குப் பணிபுரிபவர். மரியாவின் அரசுரிமையும் இத்தகை யதே. கடவுளுக்கும் மனித சமுதாயத்துக்கும் பணி செய்த அரசி மரியா. மீட்பின் திட்டத்தில் நுழைவதற்கு கடவுளுக்கு தன்னையே கொடையாக கொடுத்து வாழ்ந்த அன்பின் அரசி மரியா. பணியின் மற்றும் அன்பின் அரசுரிமையை செயல்படுத்திய மரியாவிடம் அவரது பிள்ளைகளாகிய நாமும் நமது வாழ்வின் துன்பங்களிலும், இருளான நேரங்களிலும் அவரின் உதவியைத் தொடர்ந்து நாடுவோம். அதன் மூலம் இவ்வுலகில் தொடர்ந்து பயணம் செய்வதற்குத் தேவையான அருளையும் இரக்கத் தையும் பெறுவோம். அவரது திருமகனின் விண்ணக அரசிலும் பங்குதாரர் ஆவோம்.
   இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, அனைத்துப் பயணிகளையும் வாழ்த்தி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, August 19, 2012

ஆகஸ்ட் 19, 2012

கிறிஸ்துவின் வார்த்தைகளால் நற்கருணையின் அழகை
மக்கள் மீண்டும் கண்டறிய வேண்டும் - திருத்தந்தை

  திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற இயேசு வின் உரையைப் பற்றி எடுத்துரைத்தார்.
    முந்திய நாளில் இயேசு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்தார். அந்த அற்புதத்தின் உண் மையை, அதாவது வாக்குறுதிகள் நிறைவேறும் நேரத்தை அவர் கப்பர்நாகுமில் வெளிப்படுத்துகிறார். இன்றைய திருவழிபாட்டு நற்செய்தியில், விண்ண கத்திலிருந்து இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாக இயேசு தன்னை காண்பிக்கிறார். நற்கருணை பலியில் அவரது உடனிருப் பின் கொடைக்காக நாம் எப்போதும் பசியோடு இருப்போம். அதில் தன்னையே நமக்கு உணவாகவும் பானமாகவும் தரும் இயேசு, விண்ணகத் தந்தையை நோக்கிய பய ணத்தில் நம்மைத் தாங்கி நடத்துவார்.
   இயேசு தன்னை வாழ்வு தரும் உணவாக அறிவித்தது, ஒரு இக்கட்டான தருணமாக அவரது பணி வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. இயேசு அப்பத்தின் உருவில் தன்னைக் காண்பித்து, தனது வாழ்வை கையளிக்க அனுப்ப்பப்பட்டிருப்பதை அவர் விளக்குகிறார். அவரைப் பின்பற்ற விரும்புவோர் அனைவரும், ஆழ்ந்த, தனிப்பட்ட விதத்தில் அவரோடு இணையவும், அவரது அன்பின் பலியில் பங்கேற்கவும் அழைக் கப்படுகிறார்கள். இறுதி இரவுணவு வேளையில், இயேசு நற்கருணையை ஏற்படுத்தி யதன் நோக்கம் இங்கு புலனாகிறது. கப்பர்நாகுமில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள், அவர் உலக அரசைக் கைப்பற்ற விரும்பும் மெசியா அல்லர் என்பதைப் புரிந்து கொண்டார்கள். திருப்பலிகளில் பிட்கப்படும் அப்பமாக தன்னை மாறச் செய்யும் சிலுவைப் பலியைப் பற்றிய குறிப்பை இயேசு அளிக்கிறார். திரும்பவும் ஒருமுறை கிறிஸ்துவின் வார்த்தைகளால் வியப்படைந்தவர்களாய், நற்கருணையின் அழகை மக்கள் மீண்டும் கண்டறிய வேண்டும்.

Wednesday, August 15, 2012

ஆகஸ்ட் 15, 2012

மரியா நமது வாழ்வின் இறுதி இலக்கை தெளிவாக
எடுத்துக்காட்டுபவராக உள்ளார் - திருத்தந்தை

   திருத்தந்தையரின் காஸ்தல் கந்தல்போ கோடை விடுமுறை இல்லத்தில் விடுமுறை நாட்களைச் செலவிட்டு வரும் திருத் தந்தை 16ம் பெனடிக்ட், அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவான இப்புதனன்று காலை உள்ளூர் நேரம் 8 மணிக்கு, அதா வது இந்திய நேரம் காலை 11.30 மணிக்கு, காஸ்தல் கந்தல்போ பங்கு மக்களுக்கு, பெருவிழா திருப்பலியை நிறை வேற்றினார். இத்திருப்பலிக்குப்பின், நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அன்னை மரியாவின் விண் ணேற்பு குறித்து எடுத்துரைத்தார்.
   ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், கிழக்கிலும் மேற்கிலும் உள்ள திருச்சபை, அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா வைச் சிறப்பிக்கின்றது. கத்தோலிக்க திரு
ச்சபையில், மரியன் னையின் விண்ணேற்பு குறித்த விசுவாசக் கோட்பாடு 1950ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்னை மரியா வைப் பற்றிய இம்மறையுண்மையின் கொண்டாட்டம் திருச்சபையின் தொடக்கத்தி லிருந்தே விசுவாசத்திலும் வழிபாட்டுமுறைகளிலும் விளங்கி வந்தது.
   அன்னை மரியா, இறைமகிமையில் தன் முழு உடலோடும் ஆன்மாவோடும் இருந்தார் என நான்காம் நூற்றாண்டின் இறுதியிலும் 5
ம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆறாம் நூற்றாண்டில் எருசலேமில் இறைவனின் தாய் மரியாவின் விழா சிறப்பிக்கப்பட்டது. 431ம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச்சங்கத்தின் தீர்மானங்களால் புது வடிவம் பெற்றதாக, அன்னை மரியா இவ்வுலகிலிருந்து முழு உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துச்செல்லப்பட்டதன் கொண்டாட்டமாக அது இருந்தது. அன்னை மரியாவின் விண்ணேற்பைப் புரிந்துகொள்ள, முதலில் நாம் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை நோக்கவேண்டும். இறைவனின் தாயாம் மரியா, தன் வாழ்வின் தொடக்க நொடிகளி லிருந்தே மீட்கப்பட்டவராக, இறைவனின் பாஸ்கா மறையுண்மை முற்றிலுமாக தன்னில் நிறைவேற்றப்பட்டவராக, நமது வாழ்வின் இறுதி இலக்கை மிக தெளிவாக எடுத்துக்காட்டுபவராக உள்ளார்.
   இறைவனின் வார்த்தைகள் நிறைவேறும் என்பதில் முழு நம்பிக்கைக் கொண்டி ருந்த அன்னை மரியா, பெண்களுக்குள் ஆசி பெற்றவர் என அறிவிக்கப்பட்டதை, அந்த அன்னை புனித எலிசபெத்தை சந்தித்தபோது நடந்த உரையாடலில் காண்கி றோம். 'ஏழ்மை' மற்றும் 'தாழ்நிலை' உடையோருள் தன்னையும் ஒருவராகக் காணும் அன்னை மரியா, இறைவனில் முழு நம்பிக்கையுடையவராக, தன்னில் இறைவன் வல்லச் செயல்களை ஆற்ற அனுமதிப்பவராக தன் பாடலில் காட்டுகிறார். அன்னையின் விண்ணேற்பு நமக்கு ஒளிமயமான வருங்காலத்தைத் திறக்கும் அதேவேளையில், இறைவனில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு அவர் விருப்பத்தை தினமும் நிறை வேற்றவும், அது நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இதுவே நம் இவ்வுலகப் பயணத்தில் நம்மை 'ஆசிப்பெற்றவராக' மாற்றி, விண்ணுலகக் கதவுகளை நமக்குத் திறக்கின்றது.
   இரண்டாம் வத்திக்கான் சங்கம் உரைப்பதுபோல், விண்ணுலகிற்கு எழும்பிச்சென்ற அன்னை மரியா, தொடர்ந்து நமக்காகப் பரிந்துரைத்து, முடிவற்ற மீட்பின் கொடை களை நமக்குப் பெற்றுத்தருகிறார். இவ்வுலகில் பல்வேறு துன்பங்கள் மற்றும் ஆபத் துகள் மத்தியில் இன்றும் பயணம் செய்துவரும் தன் மகனின் சகோதரர்கள், தங்கள் வானுலக வீட்டை அடையும்வரை அவர்களில் அக்கறை கொண்டு
அன்னை மரியா பராமரிக்கிறார். அந்த அன்னையை நோக்கி நாம் வேண்டுவோம்.
   இவ்வாறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அனைவரோடும் சேர்ந்து மூவேளை செபத்தைச் செபித்தபின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை யும் அளித்தார்.

Sunday, August 12, 2012

ஆகஸ்ட் 12, 2012

வாழும் உணவாகிய இயேசுவை உண்பதன் மூலம்
புதிய மனிதராக மாற முடியும் - திருத்தந்தை

  திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு நற்செய்தியில் இயேசு வாழ்வு தரும் உண வாக  தன்னை வெளிப்படுத்துவது குறித்த கருத்தை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர, சகோதரிகளே,
    ஐந்து அப்பங்களை பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, நிலைவாழ்வு தரும் உணவைப் பற்றி இயேசு பேசுவதை இன்றைய நற் செய்தி எடுத்துரைக்கிறது. அப்பம் பலுகச் செய்யப் பட்ட அற்புதத்தின் ஆழ்ந்த பொருளை அவர்கள் புரிந்துகொள்ள இயேசு உதவுகிறார்: அப்பங்களால் அவர்களது பசியைப் போக்கி நிறைவளித்த அவர், நிலையாக நிறைவு தரும் விண்ணக உணவாகிய தன்னை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறார். யூத மக்களின் பாலைநிலப் பயணத்தில் வானிலிருந்து பொழியப்பட்ட உணவான மன்னாவை உண்ட அனுபவம் பெற்றிருந்தார்கள், அது வாக்களிக்கப்பட்ட நாட்டை அடையும் வரை அவர்களுக்கு வாழ்வளித்தது. இப்பொழுது இயேசு, விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த உண்மையான, எப்பொழுதும் வாழ்வளிக்கும் உணவாகிய தன்னைப் பற்றி பேசுகிறார். அவரே நிலைவாழ்வு தரும் உணவு, ஏனெனில் அவர் கடவுளின் ஒரேப் பேறான மகன். தந்தையின் அன்புக்குரிய அவரில் மனிதரின் வாழ்வு முழுமையைக் காண்கிறது, கடவுளின் வாழ்வில் மனிதருக்கு அறிமுகம் கிடைக்கிறது.
    கடவுளின் திருவுளத்தை அறிந்து, வாழ்வின் சரியான பாதையை கண்டுகொள்ள உதவும் மோசேயின் சட்டத்தில் இருந்த கடவுளின் வார்த்தையே வானிலிருந்து இறங்கி வந்த உண்மையான உணவு என்பது யூதர்களின் எண்ணம். இப்பொழுது இயேசு, விண்ணக உணவாக அவதரித்திருக்கிறார், தானே கடவுளின் வார்த்தை, மனித உடலெடுத்த வார்த்தை என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். இன்றைய நற் செய்தி பகுதியில் காணப்படும் யூதர்களைப் போல இயேசுவின் இறைத்தன்மையில் சந்தேகம் கொள்வது கடவுளின் செயலை எதிர்ப்பதாகும். "இவர் யோசேப்பின் மக னாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர் களா?" என்று அவர்கள் கூறுகிறார்கள். மனித தோற்றங்களைத் தாண்டிச் சென்று, மனித உடலெடுத்த கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுக்கிறார் கள். புனித அகுஸ்தீன் இவ்வாறு விளக்குகிறார்: "அவர்கள் அந்த விண்ணக உணவில் இருந்து தூரமாக இருந்தார்கள், அவர்களால் அதற்கான பசியை உணர முடிய வில்லை. அவர்களது இதயத்தின் வாயில் நோய் உள்ளது ... உண்மையில், இந்த உணவு மனிதனின் உள்ளார்ந்த பசியைப் போக்கும்."
   உண்மையாகவே நாம் கடவுளின் வார்த்தைக்கானப் பசியை உணர்கிறோமா என்று நம்மையே நாம் கேட்க வேண்டும். தந்தையாம் கடவுளால் ஈர்க்கப்பட்டு அவரது வார்த்தையைக் கேட்பவர்கள் மட்டுமே, இயேசுவில் நம்பிக்கை கொள்ளுமாறு வழி நடத்தப்பட்டு அவரை சந்திப்பார்கள். அவரால் ஊட்டம் பெற்று உண்மை வாழ்வையும், வாழ்வின் பாதையில் நீதி, உண்மை, அன்பு ஆகியவற்றையும் கண்டடைவார்கள். அகுஸ்தீன் மேலும் கூறுகிறார்: "... விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த உணவாகிய ஆண்டவர், அவரில் நம்பிக்கை கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். அவரில் நம்பிக்கை கொள்ளுமாறு, வாழும் உணவாகிய இயேசுவை உண்ண வேண்டும். அவரை உண் பதன் மூலம், காண முடியாத மறுபிறப்பை அடைந்து, புதிய மனிதராக மாற முடியும். இயேசுவை சந்தித்து, அவருடனான நட்புறவில் வளர வழிநடத்துமாறு மரியன்னை யிடம் கேட்போம். அவருடைய திருமகனது அன்பின்  முழுமையான ஒன்றிப்புக்கு நம்மை அறிமுகம் செய்து வைக்குமாறும் அவரிடம் வேண்டுவோம். அதன் மூலம், விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழும் உணவாகிய இயேசுவால் நாம் ஆழ மாகப் புதுப்பிக்கப்படுவோம்.
   மூவேளை செபத்துக்கு பின் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஈரானில் நில நடுக்கத்தாலும், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தார். இறுதியில் அவர் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Wednesday, August 8, 2012

ஆகஸ்ட் 8, 2012

புதன் மறைபோதகம்: இறைப்பிரசன்னப் பாதையை
ஒளிர்விக்க செப வாழ்வு இன்றியமையாதது - திருத்தந்தை

   திருத்தந்தையர்களின் காஸ்தல் கந்தல்போ கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திருத் தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்றும் அங்கேயே தன் வாராந்திர மறைபோதகத்தை வழங்கினார். அப்போது அவர் இன்று திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட புனித தோமினிக் கஸ்மன் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
   செபத்தின் மனிதராக விளங்கிய புனித தோமினிக், போதகர் சபை என்றும் அறியப்படும் சாமிநாதர் சபை யினை நிறுவியவர். இந்த புனிதக் குருவைப்பற்றி அறிந்தவர் வழங்கும் சாட்சியமெல்லாம், 'இவர் எப்போதும் கடவுளோடுப் பேசுபவராக வும் அல்லது கடவுளைப்பற்றி பேசுபவராகவும் இருந்தார்' என்பதே. கடவுளோடு ஆழ மான உறவை புனித தோமினிக் கொண்டிருந்தார் என்பதை மட்டுமல்ல, இறைவனுடன் ஒன்றிணைந்த வாழ்வுக்கு ஏனையோரையும் கொணரும் பணியில் அர்ப்பணத்துடன் செயல்பட்டார் என்பதை இந்த சாட்சியங்கள் காட்டுகின்றன. இப்புனிதரின், 'செபிப்பதற் கான ஒன்பது வழிகள்' என்பதும் நமக்குப் பயனுள்ளதாக உள்ளது. இவரின் தியான வாழ்வு மிகவும் ஆழம் நிரம்பியதாக இருந்தது. இறைவனுடன் உரையாடல் மேற்கொள் ளும்போது, தன்னையே மறந்தவராக மணிக்கணக்கில் ஈடுபட்டார். இறைவனுடன் உரையாடும்போது அவர் வெளிப்படுத்திய முகபாவனைகளிலிருந்தே அது எவ்வளவு ஆழமானது என்பதை மற்றவர்கள் உணர முடிந்தது. இந்த இறை உரையாடல் வழி பெற்ற சக்தியினால் உந்தப்பட்டவராக தன் தினசரி நடவடிக்கைகளைத் தாழ்மையுடன் தொடர்ந்து ஆற்றினார். நம் ஒவ்வொரு வாழ்வுச் சூழலிலும் நாம் வழங்கவேண்டிய விசுவாச சாட்சியத்தின் மூலக்காரணமாக இருப்பது செபமே என்பதை கிறிஸ்தவர் களாகிய நமக்கு புனித தோமினிக் நினைவுபடுத்துகிறார். அதேவேளை, செபத்தின் வெளிப்புற அடையாளங்களான, முழந்தாளிடுதல், இறைவன் முன் எழுந்து நிற்பது, சிலுவையில் நம் பார்வையை நிலைநிறுத்துவது, அமைதியாக ஒன்று கூடுதல் போன் றவைகளையும் சொல்லித்தருகிறார். நம் அனைவருக்கும் தேவைப்படும் அன்பையும் அமைதியையும் கொணரவல்ல இறைப்பிரசன்னத்தை நோக்கியப் பாதையை ஒளிர் வித்து, அதில் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நுழைய உதவுவதற்கு, நம் செப வாழ்வு இன்றியமையாத ஒன்று.
   இவ்வாறு புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இறுதி யில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, August 5, 2012

ஆகஸ்ட் 5, 2012

வானிலிருந்து இங்கி வந்து உலகுக்கு வாழ்வு தரும் உண்மையான உணவு இயேசுவே! - திருத்தந்தை

  திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்ல மான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு நற்செய்தியில் இயேசு வாழ்வு தரும் உண வாக  தன்னை வெளிப்படுத்துவது குறித்த கருத்தை எடுத்துரைத்தார்.
    ஐந்து அப்பங்களை பலுகச் செய்த பிறகு, கப்பர் நாகும் தொழுகைக்கூடத்தில் இயேசு பேசிய புகழ் பெற்ற பேச்சைப் பற்றி நாம் இன்று சிந்திக்கிறோம். மக்கள் தன்னை பின்தொடர்ந்து வந்ததன் நோக்கத்தை இயேசு அறிந்திருந்தார். அவர் அதை அவர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கிறார்: "நீங்கள் அரும் அடையாளங் களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்." உலகு சார்ந்த தேவைகள் முக்கியமானவையாக இருந்தாலும், அவற் றில் உடனடியாக நிறைவு காணாமல் விலகிச் செல்ல மக்களுக்கு உதவ இயேசு விரும்புகிறார். சாதாரணமாக நம் அன்றாடத் தேவைகளான உணவு, உடை மற்றும் ஒருவரது வேலை போன்றவற்றை அன்றி வாழ்வின் தொடு எல்லையை ஆண்டவர் நமக்காக திறக்க விரும்புகிறார். "அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வு ணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார்" என்று இயேசு கூறுகிறார். நாம் தேடி வரவேற்க வேண்டிய இந்த அழியாத உணவைப் பற்றி அவர் பேசுகிறார். வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு தரும் உண்மையான உணவு இயேசுவே! இஸ்ரயேலர் உண்ட மன்னாவை விட மேலான உணவால் கிறிஸ்தவர்கள் ஊட்டம் பெறுகிறார்கள். ஏனெ னில், நற்கருணை வழியாக கிறிஸ்து தன்னையே உணவாக வழங்குகிறார். "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருப வருக்கு பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்று இயேசு கூறுகிறார். நாம் இயேசுவில் விசுவாசம்கொண்டு, அவரது வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ளும் போது  நிறைவான வாழ்வைப் பெறுவோம்.
   மூவேளை செபத்துக்கு பின் திருத்தந்தை, பின்வருமாறு ஆங்கிலத்தில் கூறினார்: "இங்கு வந்துள்ள ஆங்கிலம் பேசும் அனைத்து பார்வையாளர்களையும் திருப்பயணி களையும் வரவேற்பதுடன், உரோமில் இருப்பது நீங்கள் ஆண்டவர் இயேசுவோடு நெருக்கமாக வளர நான் செபிக்கிறேன். இன்றைய நற்செய்தியில் இயேசு மக்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்று கூறுகிறார். நாம் அவரில் நம்பிக்கை வைத்து, அவரது வாக்குறுதிகளில் தாகம் கொள்வோம், அதனால் நாம் நிறைவான வாழ்வைக் கொண்டிருப்போம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!"

Wednesday, August 1, 2012

ஆகஸ்ட் 1, 2012

புதன் மறைபோதகம்: நம் வாழ்வை ஞானத்துடன்
வாழ செபங்கள் உதவுகின்றன - திருத்தந்தை

   திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்ல மான காஸ்தல் கந்தல்போவில் ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஒரு மாத இடைவெ ளிக்குப்பின், இப்புதனன்று மீண்டும் தன் பொதுமறை போதகங்களைத் தொடங்கினார். காஸ்தல் கந்தல் போவில் இடம்பெற்ற பொது மறை போதகத்தில், இன்று திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட புனித அல் போன்ஸ் மரிய லிகோரி குறித்து தன் கருத்துக்களை திருத்தந்தை எடுத்துரைத்தார்.
   ஆயரும் மறைவல்லுனரும், உலக மீட்பர் சபையின் நிறுவனரும், இறையியல் வல்லுனர்களின் பாதுகாவ லருமாகிய புனித அல்போன்ஸ், 18ம் நூற்றாண்டின் புகழ்வாய்ந்த புனிதர்களுள் ஒருவர். எல்லா காலங்களிலும், குறிப்பாக துன்பம் மற்றும் சோதனைகளின் காலங் களில் செபம் இன்றியமையாதது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார் அல்போன்ஸ். தன் அனைத்துக் குழந்தைகளையும் இறைவன் பராம ரிக்கிறார் என்பதை நாம் அறிந்துள்ளபோதிலும், அவரின் கதவுகளை நாம் நம்பிக்கை யுடன் தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதையும் இப்புனிதர் கற்பிக்கிறார். நம் சோதனைகளை வெல்வதற்குரிய இறை உதவிகளும் செபம் மூலமே கிடைக்கின்றன. எளிய உள்ளத்துடன் எழுப்பப்படும் செபங்கள் பதில் பெறாமல் இருப்பதில்லை. இத்த கைய தினசரி செபத்தின் உன்னதத்தை புனித அல்போன்ஸ் லிகோரி நமக்கு கற்றுத் தருகிறார். நம் வாழ்வை நன்முறையிலும் ஞானமுடனும் வாழத் தேவையான அரு ளைப் பெறும் வகையில் நம் இதயங்களையும் மனங்களையும் இறைவன் முன்னிலை யில் திறக்க நம் தினசரி செபங்கள் உதவுகின்றன. புனித அல்போன்ஸ் மரிய லிகோரி யின் எடுத்துக்காட்டு மற்றும் பரிந்துரைகள் மூலம், நீங்களும் உங்கள் குடும்பங்களும் இறைவனின் மீட்பு வல்லமையுடைய அன்பை அறிந்து, அவரின் அபரிமிதமான ஆசீரை அனுபவிப்பீர்களாக!
   இவ்வாறு தன் வாழ்த்துக்களை வழங்கி இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.