Monday, April 1, 2013

ஏப்ரல் 1, 2013

உயிர்த்த கிறிஸ்துவின் ஆற்றல் நம்பிக்கை தேவைப்படும் இடங்களைச் சென்றடையட்டும் - திருத்தந்தை

   வானதூதரின் திங்கள் என அழைக்கப்படும் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த நாளான இன்று பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய பாஸ்கா மூவேளை செப உரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்! நமது விசுவாசத்தின் மைய மறைபொருளான உயிர்ப்பின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள வந்திருக்கும் உங்களுக்கு நன்றி. கிறிஸ்துவின் உயிர்ப்பின் ஆற்றல் ஒவ்வொருவரையும், குறிப்பாக, துன்புறுவோரையும் நம்பிக்கை தேவைப்படும் இடங்களையும் சென்றடைய நாம் செபிப்போம்.
   கிறிஸ்து தீமையை முழுமையாகவும் முடிவாகவும் வென்றுவிட்டார், ஆயினும், இவ்வெற்றியை தங்களது வாழ்விலும், வரலாறு மற்றும் சமுதாயத்தின் உண்மைத்தன்மைகளிலும் ஏற்றுக்கொள்வது நம்மைச் சார்ந்தது. இதற்காகவே இன்றைய திருவழிபாட்டில் நாம், "உமது திருச்சபையை வளரச்செய்யும் எம் வானகத் தந்தையே, உமது விசுவாசிகளாகிய நாங்கள் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை திருவருட்சாதன வாழ்வில் வெளிப்படுத்த உதவி செய்யும்" என செபிக்கிறோம்.
   நம்மை கடவுளின் பிள்ளைகளாக ஆக்கும் திருமுழுக்கும், நம்மை கிறிஸ்துவோடு இணைக்கும் நற்கருணையும் நமது வாழ்வாக மாற வேண்டும். இவை நமது எண்ணங்களிலும், நமது புரிந்துகொள்ளுதலிலும், நமது நடத்தைகளிலும், செயல்களிலும், நாம் தேர்ந்தெடுப்பவைகளிலும் வெளிப்பட வேண்டும். பாஸ்கா திருவருட்சாதனங்களில் அடங்கியுள்ள திருவருள் நமது தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்வைப் புதுப்பிப்பதற்கு அளவற்ற சக்தியைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் மனித இதயங்களின் வழியாகச் செல்வதால், உயிர்த்த கிறிஸ்துவின் அருளோடு நாம் ஒத்துழைத்தால், நமக்கும் மற்றவருக்கும் தீமையை விளைவிப்பவற்றை அவ்வருள் நன்மையாக மாற்றும், அவ்வருள், நம் வாழ்விலும், உலகிலும் பெரிய மாற்றத்தைக் கொணரும். இறையருளின்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது, திருமுழுக்கு மற்றும் நற்கருணையின் அருளால் நாம் கடவுளின் இரக்கத்தின் கருவியாக மாற முடியும்.
   நம் வாழ்வில் பெறும் திருவருட்சாதனங்களைப் பற்றி கூற வேண்டுமானால்: இதோ, அன்பு சகோதர சகோதரிகளே, நமது அன்றாட வேலை - மேலும், நான் கூறுவேன், நமது அன்றாட மகிழ்ச்சி! கிறிஸ்து என்னும் திராட்சை செடியின் கிளைகளாக, அவரது ஆவியின் அசைந்தாடும் உடனிருப்பால் தூண்டுதல் பெற்று, கிறிஸ்துவின் அருளின் கருவிகளாக இருப்பதன் மகிழ்ச்சி! பாஸ்கா மறைபொருள், நம்மிலும் நம் காலத்திலும், வெறுப்பை அன்பாகவும், பொய்மையை மெய்மையாகவும், பழிவாங்குதலை மன்னிப்பாகவும், வருத்தத்தை மகிழ்ச்சியாகவும் மாற்ற அன்னை மரியாவின் பரிந்துரை வழியாக, இறந்து, உயிர்த்த ஆண்டவரின் பெயரால் நாம் சேர்ந்து செபிப்போம்.