Saturday, January 26, 2013

ஜனவரி 25, 2013

கிறிஸ்துவில் ஒன்றிப்பதன் முதல் எடுத்துக்காட்டாக
கிறிஸ்தவர்கள் ஒளிர வேண்டும் - திருத்தந்தை

   கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செப வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை, ரோம் புனித பவுல் பேராலயத்தில் மாலை ஆராதனை வழிபாட்டை பிற கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள் முன்னிலையில் நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வரும் கருத்துகளை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செப வாரத்தின் இறுதியில், திருத்தூதர் பவுலின் கல்லறையை சூழ்ந்திருப்பது எப்பொழுதும் மகிழ்ச்சியையும் சிறப்பான அருளையும் கொண்டு வருகிறது. இந்த கொண்டாட்டம் விசுவாச ஆண்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஒரே விசுவாசத்தில் ஒன்றிப்பதே கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அடிப்படை. உண்மையில், ஒற்றுமை என்பது விசுவாசத்தில் இருந்து பிரிக்க முடியாததாக கடவுள் தந்தது. புனித பவுல் இவ்வாறு கூறுகிறார்: "நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்" (எபேசியர் 4:4-6).
   தம் மகன் இயேசு கிறிஸ்துவில் தம்மை வெளிப்படுத்திய தந்தையும் படைப்பாளருமான கடவுள், வாழ்வும் புனிதமும் வழங்கும் ஆவியைப் பொழிந்து திருமுழுக்கு விசுவாச அறிக்கையில் கிறிஸ்தவர்களை ஏற்கனவே இணைத்திருக்கிறார். கடவுளின் முதன்மை கொடையான விசுவாசத்தை தவிர்த்து, முழு கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தையும் பொது ஆர்வத்துக்காக ஒரு ஒப்பந்த வடிவமாக குறைக்க வேண்டியது மனிதரின் கடமை. இரண்டாம் வத்திக்கான் சங்கம், "தந்தை, வார்த்தை, தூய ஆவியுடன் ஒன்றிக்கும் நெருக்கமான தோழமை ஆழ்ந்த சகோதரத்துவத்தை எளிமையாக வளர்க்கும். நம்மை பிரித்து வைத்திருக்கும் கோட்பாடு சார்ந்த பிரச்சனைகள் இன்னும் குறைக்கப்படவில்லை. ஒருவருக்கொருவர் மதிப்பளித்து சகோதரத்துவ உணர்வுடன் தைரியமாக அவை அணுகப்படவில்லை. விசுவாசத்தை முதன்மையாக கொண்ட உரையாடல், கடவுளின் செயல்பாட்டுக்கு வழி திறக்காமல் நாம் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியாது, வெவ்வேறு சபைகளிலும், திருப்பணி சமூகங்களிலும் உள்ள ஆன்ம வளங்கள் மூலம் தூய ஆவியே நம்மை முழு ஒன்றிப்பை நோக்கி வழிநடத்துகிறார்.
   இன்றைய சமூகத்தில் தனி நபரிலும், கூட்டு வாழ்விலும் கிறிஸ்தவ செய்தியின் தாக்கம் குறைந்துவிட்டது போன்று தெரிகிறது, இது அனைத்து திருச்சபைகளுக்கும் திருப்பணி சமூகங்களுக்கும் சவாலாக இருக்கிறது. மீட்பரை இதுவரை அறிந்துகொள்ளாதோரிடம் நம்பிக்கைக்குரிய விசுவாசத்தை அறிவிக்க ஒற்றுமை முக்கிய தேவையாக இருக்கிறது. மறைபணி நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் பிரிவினையே இன்று நாம் காணும் கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் உருவாக காரணமாக இருந்தது. கிறிஸ்தவர்களிடையே காணப்படும் முழு ஒன்றிப்பு புரிந்துகொள்ளத்தக்கது, உண்மையில் தெளிவாக சான்று பகர்வதற்கு அடிப்படை பண்பாக உள்ளது. நாம் முழு ஒற்றுமையை நோக்கிய பாதையில் இருக்கும்போது, தற்கால உலகத்துக்கு கடந்து செல்லும் விசுவாசத்தின் நன்மைக்காக கிறிஸ்துவின் அனைத்து சீடர்களும் நடைமுறை ஒத்துழைப்பை தொடர்வது தேவையாக இருக்கிறது. ஒப்புரவு, உரையாடல் மற்றும் புரிந்துகொள்தல் ஆகியவை கிறிஸ்தவர்களின் வலிமையான இருப்பை உணர்த்துவது இக்காலத்தின் மாபெரும் தேவையாக இருக்கிறது.
   கடவுளில் கொள்ளும் உண்மையான விசுவாசம் தனிப்பட்ட புனிதத்துவம், நீதி வேட்கை ஆகியவற்றில் இருந்து பிரிக்க முடியாதது. இன்று நிறைவடையும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் தியான மையப்பொருளாக "ஆண்டவர் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்?" என்ற கருத்து இறைவாக்கினர் மீக்காவின் வார்த்தைகளில் (6:6-8) இருந்து உந்துதல் பெற்று இந்திய கிறிஸ்தவ குழுவினரால் தேர்வு செய்யப்பட்டது. கடின சூழ்நிலைகளிலும் தங்கள் விசுவாசத்திற்கு சான்று பகரும் இந்திய கிறிஸ்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, என் செபங்களையும் உறுதி அளிக்கிறேன். "கடவுளுடன் தாழ்ச்சியாக நடத்தல்" என்பது தீவிர விசுவாசத்தின் முதல் நடை, ஆபிரகாமைப் போன்று கடவுளில் நம்பிக்கை வைப்பது. புனித பவுல் கூறுவது போன்று, எத்தகைய பிரிவினைகள் நடுவிலும் கிறிஸ்துவில் ஒப்புரவாகி ஒன்றிப்பதன் முதல் எடுத்துக்காட்டாக கிறிஸ்தவர்கள் ஒளிர வேண்டும். பிற இனத்தாரின் திருத்தூதர் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுகிறார்: "கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை: ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை: கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்" (3:27-28).
   உண்மை மற்றும் அன்பில் ஒன்றிப்பதற்கான நமது தேடலில், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது நமது முயற்சிகளுக்கு அப்பால் தூய ஆவியின் செயலும் கொடையும் என்ற பார்வையை இழந்துவிடக் கூடாது. எனவே, ஆன்மீக ஒன்றிப்பு, செபமே கிறிஸ்தவ ஒன்றிப்பின் இதயமாக விளங்குகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவது போன்று, "உள் மனமாற்றம் இல்லாமல் உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு சாத்தியமாகாது." இறைவாக்கினர் பரிந்துரைப்பதும், திருத்தூதர் பவுலில் திகழ்வதுமான உண்மையான மனமாற்றமே நம் வாழ்வின் மையத்தில் நம்மை கடவுளுக்கு நெருக்கமாகவும், ஒருவர் மற்றவருக்கு நெருக்கமாகவும் கொண்டு வரும். நமது இதயம் மற்றும் உள்ளத்தின் அகவாழ்வை புதுப்பித்து, அன்றாட வாழ்வில் பிரதிபலித்தால், ஒப்புரவு மற்றும் உரையாடல் வழியாக, மதிப்பிலும் அன்பிலும் கிறிஸ்தவ ஒன்றிப்பை புரிந்துகொள்ள முடியும், "இதனால் உலகம் நம்பும்." (யோவான் 17:21).
   அன்பு சகோதர சகோதரிகளே, திருச்சபையின் நற்செய்தி பணிக்கு ஒப்பற்ற முன்மாதிரியாகவும், கடவுளுடனான நெருக்கமான ஒன்றிப்பு மற்றும் மீட்பர் கிறிஸ்துவில் அனைத்து மனிதரிடையேயான ஒன்றிப்புக்கு அடையாளமாகவும் கருவியாகவும் விளங்கும் கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம். ஆமென்.