Sunday, May 27, 2012

மே 27, 2012

மனித ஒற்றுமை, புரிந்துணர்தல் மற்றும் பகிர்தலின்
விழாவாக பெந்தக்கோஸ்து இருக்கிறது - திருத்தந்தை

   தூய ஆவியாரின் பெருவிழாவை முன்னிட்டு, இன்று உரோம் தூய பேதுரு பேராலயத்தில் திருப் பலி நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வருமாறு மறையுரை வழங்கினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   பெந்தக்கோஸ்து விழா நாளில், உங்களோடு திருப்பலி நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடை கிறேன். இந்த மறைபொருள் திருச்சபையின் திரு முழுக்கினைக் கொண்டிருக்கிறது. திருச்சபைக்கு தொடக்க வடிவத்தையும், அதன் பணிக்கான உந்துதலையும் வழங்கிய ஒரு நிகழ்வு இது. இந்த வடிவமும் உந்துதலும் எப்பொழுதும் நிலைத்திருப்பதுடன், எப்பொழுதும் சரியான நேரத்தில், சிறப்பாக திருவழிபாட்டுச் செயல்கள் மூலம் புதுப்பிக்கப் படுகின்றன.
   இந்த காலைப் பொழுதில் பெந்தக்கோஸ்து மறைபொருளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்க விரும்புகிறேன். மனித ஒற்றுமை, புரிந்துணர்தல் மற்றும் பகிர்தல் ஆகியவற்றின் விழாவாக பெந்தக்கோஸ்து இருக்கிறது. தகவல் தொடர்பு வளர்ச்சி களால் புவியியல் தூரங்கள் மறைந்தது போல தோன்றினாலும், மக்களிடையே புரிதலும் பகிர்தலும் மேலோட்டமானவையாகவும் கடினமானவையாகவுமே உள்ளன என்பதை நாம் அனைவரும் காண முடிகிறது. ஏற்றத்தாழ்வுகள் மோதலுக்கு வழி வகுக்கின்றன; தலைமுறைகளுக்கு இடையிலான உரையாடல் கடினமாகி, சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன; மக்கள் சண்டையிலும் ஆக்கிர மிப்பிலும் ஈடுபட்டிருப்பதை நாம் அன்றாட நிகழ்வுகளாக பார்க்கிறோம்; ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்தல் மிகவும் கடினமானதாக உள்ளது; மேலும், மக்கள் தங்கள் வட்டத்துக்குள்ளேயே இருக்க விரும்புவதுடன் தங்கள் சொந்த விருப்பங் களைப் பெருக்கி கொள்கின்றனர். இத்தகையச் சூழலில், நமக்கு மிகவும் தேவையான ஒற்றுமையை நாம் உண்மையில் கண்டுபிடிக்கவோ அனுபவித்துணரவோ முடியுமா?
   பழைய ஏற்பாட்டில், தங்களை கடவுளுக்கு இணையாக்க விரும்பியவர்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டிய நிகழ்வைக் காண்கிறோம். கடவுளின் இடத்தில் தங் களை வைக்க விரும்பிய அவர்கள், ஒருவர் மற்றவருக்கு எதிராக செயல்படத் தொடங்கினர். அத்தகைய ஒரு சூழல்தான் இப்பொழுதும் நிலவுகிறது. அறிவியல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி, நாம் இயற்கைக்கு மேற்பட்ட வகையில் செயலாற்ற பலம் அளிக்கிறது. நமக்கு தேவையானவற்றை நாமே உருவாக்கவும் கட்டவும் முடியும் என்ற நிலையில், கடவுள் தேவையற்றவராகவும் அர்த்தமற்றவராகவும் காணப் படுகிறார். நாம் மீண்டும் ஒரு பாபேல் அனுபவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணரவில்லை. தகவல் தொடர்பில் வளர்ச்சி பெற்றிருந்தும், நமது புரிந்துணர்தல் அதிகரித்திருப்பதாக நாம் கூற முடியுமா? அவநம்பிக்கை, சந்தேகம், பயம் போன்ற உணர்வுகளே மேலோங்கியிருக்கும் நிலையில், தங்களுக்குள் மனித உறவுகளை இழந்து, ஒருவர் மற்றவருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையைத் தானே காண்கிறோம். அப்படியானால் ஒற்றுமையும் இணக்கமும் உண்மையிலேயே இருக்க முடியுமா? எப்படி?
   இதற்கான விடையை மறைநூல் நமக்கு தருகிறது: ஒற்றுமை என்பது கடவுளின் ஆவியின் கொடையாக மட்டுமே இருக்க முடியும். தொடர்புகொள்வதற்கான புதிய இதயத்தையும், புதிய மொழியையும், புதிய திறனையும் அது நமக்கு வழங்குகிறது. இதுதான் பெந்தக்கோஸ்து நாளன்று நிகழ்ந்தது. ஈஸ்டருக்கு 50 நாட்களுக்கு பின்பு அந்த காலை வேளையில், எருசலேமில் பலத்த காற்று வீசியது; தூய ஆவியின் நெருப்பு கூடியிருந்த சீடர்கள்மீது இறங்கியது. அவர்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் வந்து அமர்ந்ததுடன் அவர்களில் ஒரு தெய்வீக நெருப்பை, உருமாற்றும் திறனுடைய அன்பின் நெருப்பை பற்றியெரியச் செய்தது. அவர்களின் பயம் மறைந்தது, அவர்களது உள்ளங்கள் புதிய பலத்தால் நிரப்பப்பட்டன, அவர்கள் நாவு தளர்ந்து சுதந்திரமாக பேசத் தொடங்கினர், அதன் வழியாக இயேசு இறந்து, உயிர்த்தெழுந்த செய்தியை அனைவரும் புரிந்துகொள்ள முடிந்தது. பிரிவினையும் புரிந்துகொள்ளாமையும் இருந்த இடத்தில், பெந்தக்கோஸ்து நாளில் ஒற்றுமையும் புரிந்துணர்தலும் பிறந்தன.
   இன்றைய நற்செய்தியில் இயேசு, "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்" என்று உறுதியளிக்கிறார். தூய ஆவியைப் பற்றி பேசும்போது, திருச்சபை என்பது என்ன என்பதையும், திருச்சபை எவ்வாறு ஒற்றுமையிலும் உண்மையில் ஒன்றித்தும் வாழவேண்டும் என்பதை இயேசு விளக்குகிறார். கிறிஸ்தவராக வாழ்வது என்பது நமது சொந்த வட்டத்துக்குள் அடைத்துக்கொள்வது அன்று, மாறாக மற்றவர்களை நோக்கி நம்மைத் திறந்து செல்வதே என்று அவர் நமக்கு கூறுகிறார்; அதாவது முழு திருச்சபையையும் நம்மில் வரவேற்க வேண்டும், அல்லது திருச்சபை நம்மை வரவேற்க அனுமதிக்க வேண்டும். எனவே நான் ஒரு கிறிஸ்தவனாக பேசும்போது, சிந்திக்கும்போது அல்லது செயல்படும்போது, நான் என்னை எனக்குள் அடைத்துக் கொண்டு நிற்பதில்லை - ஆனால் நான் அனைத்திலும், அனைத்தில் இருந்தும் தொடங்குகிறேன். அதனால் ஒற்றுமை மற்றும் உண்மையின் ஆவியான தூய ஆவி மக்களின் உள்ளங்களிலும் மனதிலும் தொடர்ந்து செயல்பட்டு, அவர்கள் ஒருவர் ஒருவரை சந்திக்கவும் வரவேற்கவும் உற்சாகமூட்ட முடியும். ஆவியானவர் முழு உண்மைக்கு (அதாவது இயேசுவுக்கு) நம்மை அறிமுகம் செய்து வைப்பதுடன், அதை ஆராயவும் புரிந்துகொள்ளவும் நம்மை வழிநடத்துகிறார். நமக்குள் நம்மை மூடிக் கொள்வதன் மூலம் நாம் புரிந்துணர்தலில் வளர முடியாது, மாறாக ஆழ்ந்த தன்னடக்க மனநிலையுடன், திருச்சபையாகிய நம்மில் கேட்பதிலும் பகிர்தலிலும் மட்டுமே முடியும். இப்பொழுது பாபேல் மற்றும் பெந்தக்கோஸ்தின் வேறுபாடு விளங்குகிறது. எங்கே மக்கள் கடவுளாக மாற விரும்புகின்றார்களோ, அவர்கள் தங் களுக்குள்ளே மற்றவருக்கு எதிராக குழி தோண்டுவதில் மட்டுமே வெற்றிபெறுகின் றனர். அவர்கள் ஆண்டவரின் உண்மையில் தங்களை வைக்கின்றபோது, அவரது தூய ஆவியின் செயலுக்கு தங்களை திறக்கின்றபோது, அது அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களை இணைக்கும்.
   இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், "தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்" என்று கூறுகிறார். நாம் கிறிஸ்துவின் ஆவியின் உதவியால் மட்டுமே நன்மையின் தூண்டுதலை தேர்வுசெய்து பின்பற்ற முடியும். ஊனியல்பின் இச்சைகளை புனித பவுல் பட்டியலிடுகிறார்: பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம் போன்ற தன்னலம் மற்றும் வன்முறையின் பாவங்களாக அவை உள்ளன. உண்மையான மனிதராகவும் கிறிஸ்தவ வழியில் அன்பிலும் வாழ இவை நம்மை அனுமதிப்ப தில்லை. "தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி" என்றும் புனித பவுல் உறுதி செய்கிறார். நமது மனிதத்தன்மையை இழக்க தூண்டும் ஊனியல்பின் இச்சை களை குறிக்க பன்மையையும், ஆவியின் செயலான கனியைக் குறிக்க ஒருமை யையும் திருத்தூதர் பயன்படுத்துவதைக் காண்கிறோம். இவ்வாறே பாபேலின் பிரி வினையும் பெந்தக்கோஸ்தின் ஒருமைப்பாட்டில் இருந்து வேறுபடுகிறது.
   அன்பு நண்பர்களே, நாம் ஒற்றுமை மற்றும் உண்மையின் ஆவிக்கு ஏற்ப வாழ வேண்டும். நமது சொந்த உண்மைகளை பின்பற்றுவதற்கான சோதனைகளை வெல்லவும், திருச்சபையில் உள்ள கிறிஸ்துவின் உண்மையை வரவேற்கவும் நம்மை ஒளியூட்டி வழிநடத்தும் ஆவிக்காக செபிக்க வேண்டும். பெந்தக்கோஸ்து பற்றி லூக்கா எழுதியபடி, விண்ணகம் செல்வதற்கு முன்பு இயேசு, தூய ஆவியைப் பெறுவதற்கு ஒன்றுகூடி தங்களை தயாரிக்குமாறு திருத்தூதர்களிடம் கூறினார். அவர்கள் மேல்மாடி அறையில் ஒன்றாக கூடி, மரியாவோடு இணைந்து செபித்துடன் வாக்களிக்கப்பட்ட நிகழ்வுக்காக காத்திருந்தனர். அது பிறந்தபோது நிகழ்ந்தது போன்றே, திருச்சபை இன்றும் மரியாவோடு ஒன்றாக இணைந்து செபிக்கிறது: "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உமது விசுவாசிகளின் இதயங்களை நிரப்பும், அவற்றில் உமது அன்புத் தீயை மூட்டியருளும்!" - ஆமென்.