Sunday, June 10, 2012

ஜூன் 10, 2012

நற்கருணை ஆராதனை திருச்சபையின் மையப்
பகுதியாக அமைந்துள்ளது - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு உலகின் பல இடங்களில் கொண்டாடப்படும் கிறிஸ் துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழாவைப் பற்றி எடுத்துரைத்தார். அவர் இந்த விழாவில் கடைபிடிக்கப்படும் நற்கருணை பொது வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்தும், பல பங்குகளிலும் மறை மாவட்டங்களிலும் நடைபெறும் நற்கருணை பவனி குறித்தும் எடுத்துக்கூறினார். இந்த விழாவில் நடைபெறும் நற்கருணை ஆராதனை கிறிஸ்தவ தனிநபர்கள், விசுவாச சமூகங்கள், மற்றும் முழு திருச்சபையோடும் ஒன்றிணைந்த மையப் பகுதியாக அமைந்துள்ளது என்றும், கொண்டாட்டங்களின் நேரங்களையும் கடந்து நம் ஆண்டவர் நற்கருணை அருட்சாதனத்தில் என்றென்றும் பிரசன்னமாய் இருக்கிறார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
   ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளுக்கு சிறப்புரை வழங்கிய திருத்தந்தை பின்வரு மாறு கூறினார்: "மூவேளை செபத்துக்காக இந்த சதுக்கத்தில் ஒன்று கூடியுள்ள ஆங்கிலம் பேசும் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இன்றைய கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா, மிகப் புனிதமான நற்கருணையில் உள்ள ஆண்டவரின் மீட்பளிக்கும் பிரசன்னத்தைக் கொண்டாடுகிறது. இறுதி இர வுணவு வேளையில், தனது சிலுவை மரணத்துக்கு முந்திய இரவில், இயேசு கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான புதிய நித்திய உடன்படிக்கையின் அருட் சாதனமாக நற்கருணையை நிறுவினார். இந்த மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் பலி திருச்சபையை விசுவாசம், ஒற்றுமை மற்றும் புனிதத்தில் உறுதிப்படுத்துகிறது. உங்கள் அனைவர்மீதும் மகிழ்ச்சி மற்றும் அமைதியின் ஆசீரைப் பொழிய நான் ஆண்டவரை மன்றாடுகிறேன்."
   மூவேளை செபத்துக்கு பின் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற வியாழக்கிழமை ஜூன் 14ந்தேதி உலக சுகாதார அமைப்பினால் கொண்டாடப்படும் உலக இரத்த தான தினத்தை கவனத்திற்கு கொண்டுவந்தார். இரத்த தானம் வழங்கும் ஒவ்வொருவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அவர், பல நோயாளி களுக்கு இன்றியமையாததாகவும், ஒற்றுமையின் வடிவமாகவும் விளங்கும் இந்த செயலுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.