Sunday, January 27, 2013

ஜனவரி 27, 2013

மீட்பு அளிப்பதற்காக கடவுள் உங்களை அழைக்கும்
நாளை பற்றிக் கொள்ளுங்கள்! - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆண்டவரின் நாளான ஞாயிற்றுக்கிழமையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்றைய திருவழிபாடு லூக்கா நற்செய்தியின் இருவேறு பகுதிகளை நமக்கு இணைத்து தருகிறது. முதல் பகுதி (1:1-4), 'கடவுளின் நண்பர்' என்ற பொருள் கொண்ட பெயருடைய 'தியோபில்' என்பவருக்கு எழுதப்பட்ட முன்னுரையைத் தருகிறது. நற்செய்தியை அறிந்துகொள்ள விரும்பி, கடவுளுக்கு தன்னைத் திறக்கும் ஒவ்வொரு நம்பிக்கையாளரையும் அவரில் நாம் காண முடியும். இரண்டாம் பகுதி (4:14-21), தூய ஆவியின் வல்லமை உடையவராய் ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்ற இயேசுவைப் பற்றிய செய்தியை நமக்கு வழங்குகிறது. ஓர் உண்மையான நம்பிக்கையாளராக வாராந்திர வழிபாட்டு நிகழ்வைப் புறக்கணிக்காமல், தன் மக்களோடு செபிக்கவும் மறைநூலைக் கேட்கவும் ஆண்டவர் திருஅவைக்கு செல்கிறார். இந்த திருச்சடங்கில் ஐந்நூல்கள் அல்லது இறைவாக்கினர் நூல்களில் இருந்து வாசகமும் அதற்கான சிந்தனையும் இடம்பெறும். அந்நாளில், இயேசு எழுந்து நின்று இறைவாக்கினர் எசாயா நூலின் பின்வரும் பகுதியை வாசிக்க தொடங்கினார்: "ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்" (61:1-2).
   ஓரிஜன் இவ்வாறு கூறுகிறார்: "இயேசு மறைநூலைத் திறந்து, அவரைப் பற்றிய இறைவாக்குகளை வாசித்தது தற்செயல் அல்ல, அது கடவுளின் முன்னறிவின் திட்டத்தாலே நிகழ்ந்தது." இயேசு அதை வாசித்து முடித்ததும், அனைவரும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தபோது, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார் (லூக்கா 4:21). அலக்சாண்ட்ரியா புனித சிரில் இவ்வாறு கூறுகிறார்: "கிறிஸ்துவின் முதல் மற்றும் இறுதி வருகைக்கும் இடைப்பட்டதாக, நம்பிக்கையாளர் கேட்பதற்கும் மனந்திரும்புவதற்கும் ஏற்றதாக 'இன்று' இருக்கிறது." மேலும் தீவிரமான பொருளில், மீட்பு வரலாற்றில் இயேசுவே இன்றாக இருக்கிறார், ஏனெனில் அவரே மீட்பின் முழுமையைக் கொண்டு வந்து நிறைவு செய்திருக்கிறார். "இன்று" எனும் வார்த்தை, புனித லூக்காவின் அன்புக்குரியது, நற்செய்தியாளரால் முன்வைக்கப்படும் கிறிஸ்தியல் பெயரான "மீட்பர்" என்பதற்கு நம்மை இட்டுச் செல்கிறது. குழந்தைப் பருவ நற்செய்தியில், ஏற்கனவே இது வானதூதரின் வார்த்தைகளில் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது: "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:11).
   இந்த நற்செய்தி பகுதி "இன்று" நமக்கு சவால் விடுகிறது. அனைத்திற்கும் முதலாவதாக, நாம் ஞாயிறன்று எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தூண்டுகிறது: அது ஓய்வு மற்றும் குடும்பத்துக்கான நாளாக, அதிகமாக ஆண்டவருக்கு அர்ப்பணிக்கும் நாளாக, நற்கருணை விருந்தில் பங்கேற்று, கிறிஸ்துவின் உடல் மற்றும் இரத்தத்தாலும், அவரது வாழ்வு தரும் வார்த்தையாலும் ஊட்டம் பெறுவதாக உள்ளது. இரண்டாவது, கவனச்சிதறல்கள் நம்மை திசைத்திருப்பும் இக்காலத்தில், நமது கேட்கும் திறனை நாம் அறிய இந்த நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. நாம் கடவுளைப் பற்றியும், கடவுளோடும் பேசுவதற்கு முன்பு, நாம் கேட்க வேண்டும், நம்மோடு பேசும் ஆண்டவரின் குரலைக் கேட்கும் கல்விக்கூடமாக திருச்சபையின் திருவழிபாடு அமைந்துள்ளது. இறுதியாக அவர் நமக்கு கூறுவது, ஒவ்வொரு கணமும் நமது மனமாற்றத்துக்கு ஏற்புடையது. ஒவ்வொரு நாளும் நமது மீட்பின் நாளாக மாற முடியும், ஏனெனில் மீட்பு என்பது திருச்சபைக்கும், கிறிஸ்துவின் அனைத்து சீடருக்கும் தொடர் கதையாக இருக்கிறது. இதுதான் "பற்றிக் கொள்ளுதல்" கிறிஸ்தவப் பொருள்: உங்களுக்கு மீட்பு அளிப்பதற்காக கடவுள் உங்களை அழைக்கும் நாளை பற்றிக் கொள்ளுங்கள்! மனித குலம் அனைத்தின் மீட்பரான கடவுளின் உடனிருப்பை நம் அன்றாட வாழ்வில் கண்டறிந்து வரவேற்க, கன்னி மரியா எப்பொழுதும் நம் முன்மாதிரியும் வழிகாட்டியுமாக திகழ்வாராக!