Monday, January 2, 2012

ஜனவரி 1, 2012

உலகில் நீதியையும் அமைதியையும் நிலைநிறுத்துவது
ஒரு சவாலான பயணம் - திருத்தந்தை

   புதிய ஆண்டின் முதல் நாளன்று புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் திரண்டு இருந்த யிரக்கணக்கான மக்களுக்கு இவ்வாண்டின் முதல் மூவேளை செப உரையை வழங்கும்போது, ஜனவரி முதல் நாளில் கொண்டாடப்படும் இறைவனின் தாய் மரியா என்ற திருநாளைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அன்னை மரியாவின் வழியாகவும், குழந்தை இயேசுவின் முகத்திலும் இறைவனின் திருமுகத்தைக் கண்டு, புலர்ந்திருக்கும் 2012ம் ஆண்டை நாம் துவக்குகிறோம் என்றார்.
   45வது உலக அமைதி நாளுக்கென்று தான் வெளியிட்டுள்ள செய்தியில் வலியுறுத்தியுள்ள இளையோர் குறித்த தன் கருத்துக்களைக் குறித்து இம்மூவேளை செப உரையில் பேசிய திருத்தந்தை, கல்வி, வேலை தேடுதல், வாழ்க்கைத் துணையைத் தேர்தல், குடும்பம் அமைத்தல் என்று வாழ்வின் முக்கியமான முடிவு களில் சரியான பாதையைத் தேடும் இளையோருக்கு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய அனைத்து அமைப்புக்களும் சரியாக வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
   நீதியையும், அமைதியையும் உலகில் நிலை நிறுத்துவது மிகப் பெரிய சவால் என்று சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, அமைதி என்பது ஒரு நாளில் அடையக்கூடிய ஓர் இலக்கு அல்ல என்றும், தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு சவாலான பயணம் என்றும் கூறினார்.
   கிறிஸ்மஸ் காலத்தில் நாம் கொண்டாடும் அமைதியின் அரசரும் அவரது தாயும், நம் உலகத் தலைவர்கள் அனைவரையும் அமைதி மற்றும் நீதியின் பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற வேண்டுதலுடன் தன் மூவேளை
செப உரையை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கூடியிருந்த அனைவருக்கும் தனது சிறப்பு ஆசீரையும் வழங்கினார்.