Thursday, October 6, 2011

அக்டோபர் 5, 2011

புதன் மறைபோதகம்: நமக்காக தன் வாழ்வையே கையளித்த நல்லாயன் இயேசு - திருத்தந்தை

   உரோம் நகருக்கு வரும் சுற்றுலா மற்றும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப் படுவதால், திருத்தந்தையின் இவ்வாரப் புதன் பொது மறைபோதகம் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 23 குறித்து நோக்குவோம் எனத் தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை.
   'ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறை யில்லை' - மிக நேர்த்தியான முறையில் ஆயர் மற்றும் மேய்ச்சல் குறித்து விவரிப்பதாகவும், மக்களால் அதிக அளவு விரும்பப்படுவதாகவும் இருக்கும் இந்த திருப்பாடல் 23, செபத்தின் முக்கிய பண்புக்கூறாக இருக்கும் இறைவனின் அன்புப் பராமரிப்பில் கொள்ளும் தீவிர நம்பிக்கை குறித்துப் பேசுகிறது. பசும்புல் நிலத்தை நோக்கி ஒருவனை வழிநடத்திச் செல்லும் நல் ஆயனாகவும், அவன் அருகேயிருந்து அவனை அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காப்பவராகவும் இறைவனைக் காட்டி இத்திருப்பாடலைத் துவக்குகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'அமைதியான நீர்நிலை களுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.' அடுத்தக் காட்சியோ, ஆயனின் கூடாரம் நோக்கிச் செல்கின்றது. இக்கூடாரத்தில் இறைவன், அவனை ஒரு விருந்தாளியாக வரவேற்று, உணவு, எண்ணெய், திராட்சை இரசம் எனும் கொடைகளை வழங்குகிறார். 'எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.'
   ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வதற்கென வழி நடக்கும் பாதையில் நன்மைத்தனம் மற்றும் இரக்கத்தின் துணை கொண்டு இறைவனின் பாதுகாப்பு, திருப்பாடல் ஆசிரியருடன் இணைந்து செல்கிறது. இறைவனை இஸ்ராயேலின் ஆயனாகக் காணும் இந்த வலிமை மிகுந்த உருவகம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியதிலிருந்து, தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தை வந்தடையும்வரையான மத வரலாற்றில் இணைந்தே வருகிறது. இவ்வுருவகம் தன் கடைமுடிவு வெளிப்பாட்டையும் நிறைவையும் இயேசுவின் வருகையில் கண்டது. நல்லாயனாம் அவர் தன் வாழ்வையே தன் ஆடுகளுக்காகக் கையளித்தார். வானுல கில் நமக்காகக் காத்திருக்கும் மெசியாவின் விருந்திற்கு முன்னோடியாகத் தன் உடலையும் இரத்தத்தையும் கொண்ட விருந்தினை நமக்கெனத் தயாரித்தவர் அவரே.
   இவ்வாறு இப்புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளான திஜிபுத்தி, எத்தியோப்பியா, கென்யா, சொமாலியா, உகாண்டா ஆகியவைகளுக்கான தன் சிறப்பு விண்ணப்பத்தையும் விடுத்தார்.
   ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளின் பஞ்சம் குறித்தச் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே உள்ளன. மனித குல நெருக்கடியை சமாளிக்கும் வழிகள் குறித்து ஆராயும் நோக்கில் இங்கு கூடியிருக்கும் அந்நாட்டிற்கான குழுவுக்கு என் ஊக்கத்தை வழங்குகின்றேன். பஞ்சத்தால் துன்புறும் மக்களுக்கான உதவிகளுக்கென ஏற்கனவே விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ள கேன்டர்பரி பேராயர் அவ்ர்களின் பிரதிநிதி ஒருவரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார். போதிய உணவு மற்றும் தண்ணீர் இன்மையாலும் நோய்களாலும் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் குழந்தை களுக்காகவும், பெருந்துன்பங்களை அனுபவித்து வரும் நம் எண்ணற்ற சகோதர சகோதரிகளுக்காகவும் செபிக்குமாறும், உதவிகளை வழங்குமாறும் சர்வதேச சமுதாயத்திடம் மீண்டும் ஒருமுறை நான் விண்ணப்பிக்கின்றேன். இவ்வாறு ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளுக்கான விண்ணப்பத்தை விடுத்த திருத்தந்தை, அனை வருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.