Thursday, November 3, 2011

நவம்பர் 2, 2011

கிறிஸ்துவின் உயிர்ப்பு, இறைவன் வழங்கும் முடிவற்ற வாழ்வின் வாக்குறுதியாக இருக்கிறது - திருத்தந்தை

   அனைத்துப் புனிதர்கள் தினமான நவம்பர் முதல் தேதி, அதாவது இச்செவ்வாயன்று இத்தாலிக்குத் தேசிய விடுமுறை நாள். அந்நாளைக் குடும்பத் துடன் சிறப்பாகக் கொண்டாடிய மக்கள், உலகின் ஏனையப் பகுதிகளில் உள்ள கத்தோலிக்கர்கள் போல், இப்புத னன்று, கல்லறைகளுக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்து வருகின்றனர். இவ்வாரப் புதன் பொதுமறைபோதகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டும் இந்த அனைத்து ஆன்மாக்கள் தினம் அதாவது 'கல்லறைத் திருநாள்' குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
   அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் இந்நாளில் திருச்சபை, நம்மை விட்டுப் பிரிந்துச் சென்றுள்ள விசுவாசிகளின் ஆன்மாக் களுக்காகச் செபிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் நினைவுகூரப்படும் இந்நாள், கல்லறைகளுக்குச் சென்று தரிசிப்பதை உள்ளடக்கு வதோடு, மரணம் எனும் மறையுண்மையை ஆழ்ந்து தியானிக்கவும், கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழி வழங்கப்பட்ட முடிவற்ற வாழ்வுக்கான வாக்குறுதியில் நம் விசுவாசத்தைப் புதுப்பிக்கவும் வாய்ப்புத் தருவதாக உள்ளது. மனிதர்கள் என்ற வகையில் நாம் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம், அதேவேளை, அதன் வெளிப் படையான கண்ணால் காணக்கூடிய முடிவை ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது. நம் வாழ்வுக்கு முழு அர்த்தத்தைத் தரும், முடிவற்ற வாழ்வு குறித்த அந்தப் பெருநம்பிக்கையில், மரணம் குறித்த நமது அச்சம் எளிதாக்கப்படுகின்றது என விசுவாசம் நமக்குக் கற்பிக்கின்றது. 
   அன்பே நிறைவான இறைவன் தன் மகனின் மரணம் மற்றும் உயிர்ப்பின் வழி முடிவற்ற வாழ்வு பற்றிய வாக்குறுதியை நமக்கு வழங்குகிறார். கிறிஸ்துவில், மரணம் என்பது வெறுமையின் படுகுழியாக அல்ல, மாறாக, முடிவேயற்ற ஒரு வாழ்விற்கானப் பாதையாகத் தெரிகின்றது. கிறிஸ்துவே உயிர்ப்பும் வாழ்வும். அவரில் நம்பிக்கைக் கொள்வோர் எந்நாளும் இறப்பதில்லை. ஒவ்வொரு ஞாயிறும் நம் விசுவாச பிரமாணத்தை அறிக்கையிடும்போது, இந்த மறையுண்மையில் நம் விசுவாசத்தை மீண்டும் உறுதிசெய்கிறோம். நம்மிடமிருந்து மறுவாழ்வுக்கு பிரிந்து சென்றவர்களைப் புனிதர்களுடனான ஐக்கியத்தில் நினைவுகூரும் இவ்வேளையில், இயேசுவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்றவும், நம்பிக்கையின் வருங்காலத்தை இவ்வுலகில் கட்டியெழுப்பவும் நம் விசுவாசம் நம்மைத் தூண்டுவதாக. 
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இந்த வியாழனும் வெள்ளியும் ஃபிரான்சின் கேன்சில் இடம்பெற உள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் குறித்தும் எடுத்துரைத்தார். உலகப் பொருளாதாரம் தொடர்பு டைய முக்கிய பிரச்சனைகள் குறித்து இடம்பெற உள்ள இந்தத் தலைவர்களின் கூட்டம், உலக அளவில் ஒன்றிணைந்த, உண்மையான மனித குல வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவைகள் அகற்றப்பட உழைப்பதாக என்ற அழைப்பையும் விடுத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.